சத்ரியன் – இது யதார்த்தமான கேங்ஸ்டர் கதை – எஸ்.ஆர்.பிரபாகரன்!

எஸ்.ஆர்.பிரபாகரன்…

சுந்தரபாண்டியன் மூலம் பிளாக்பஸ்டர் படம் தந்தவர். ஒரு சினிமா எடுக்கிறோம் என்பதை தாண்டி நம் மக்களின் வாழ்வியலை இயல்பாக பதிவு செய்யவேண்டும் என ஆசைப்படுவார். அவரது அடுத்த படமான சத்ரியன், விகரம்பிரபு, மஞ்சிமாமோகன் உட்பட பல விஷயங்கள் மனம்விட்டு பேசியதில் இருந்து

ட்ரெய்லரை பார்த்தாலே கதைக்கு ரொம்ப மெனக்கெட்டது தெரியுதே?

ஆல்ரெடி நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கு உதயம்,அமரன் போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள் இங்கு பதிவாகியிருக்கு, ஆனா இந்த படங்கள் ஒரு சினிமாவாதான் காட்சிபடுத்திருப்பாங்க அமரன்ல கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்ச்சி பண்ணினாங்க, நான் ஒரு கேங்ஸ்டரை சினிமாவா இல்லாம, அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையா அழுத்தமா பதிவு பண்ணிருக்கேன். இந்த சத்ரியன் படத்துல சினிமாதனமான கேங்ஸ்டர எந்த பிரேம்லயும் பாக்கமாட்டீங்க. ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில என்னென்ன நடக்கும் அத எப்பிடி எதிர் கொள்வாங்கறதுதான் படத்துல இருக்கும். எந்த பிரேம்லயும் ஹீரோ தெரிய மாட்டார். குணா என்கிற இளைஞன் தான் தெரிவார். நம்ம ஊரோட தன்மை, கலாசாரம், பழக்கவழக்கம், வாழ்வியல தான் பதிவு பண்ணியிருக்கேன்.

இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பின் ஏன் இந்த இடைவெளி ?

ரெட்ஜெயண்ட் படத்தை முடிச்சதும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ண கமிட் ஆனேன். ரஜினிமுருகன் படம் ஆரம்பிக்கவே தாமதமானது. எனவே நாங்களும் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. இனிமேலும் தாமதிச்சா நல்லாயிருக்காதுனு சத்யஜோதி பிலிம்ஸ்ல இருந்து ஆல்ரெடி வந்த ஆஃபரை ஏத்துக்கிட்டேன். சத்யஜோதிகிட்ட விக்ரம்பிரபு கால்ஷீட் இருந்தது. விக்ரம்பிரபு வாகா, வீரசிவாஜி இரண்டு படங்கள்ல பிஸியா இருந்தார் நான் அவருக்கு சொன்ன கதைக்கு கெட்அப் மாற வேண்டியிருந்ததால அந்த இரண்டு படங்கள் முடிச்சுட்டுதான் வர வேண்டியதாயிருச்சு. லேட்டானாலும் கூட நான் நினைச்ச ஒரு படத்தை எடுத்திட்டேன் என்கிற திருப்தியை சத்ரியன் கொடுத்துருக்கு. இந்த தாமதம் சினிமால சகஜம் தானே?

கேங்ஸ்டர் ஆக்ஷனுக்கு விக்ரம்பிரபு செட் ஆனாரா ?

நான் நினைத்த குணாவாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார். “அரிமாநம்பி”, “இவன் வேறமாதிரி” இரண்டுலயும் வேற, வேற ஆக்ஷன் கேரக்டர்ஸ்ல நடிச்சுட்டாரு. அதுலயே நிறைய வித்தியாசம் காட்டினவரு இந்த படத்துல இன்னும் வித்தியாசம் காமிச்சிருக்காரு. இந்த படம் நம்ம வாழ்வியலோட இணைஞ்ச ஆக்ஷன்றதால விகரம்பிரபுவ ஆக்ஷன் ஹீரோவா நம்ம மனசுல பதிய வைக்கிற படமா சத்ரியன் இருக்கும். படம் முழுக்கவே யதார்த்தம் மீறாத ஆக்ஷன் தான் பண்ணியிருக்கார்.

மஞ்சிமா மோகன் எப்படி பிடிச்சீங்க ?

நான் இந்த படத்துக்கு ஏற்கனவே ஹீரோயினா இருக்குறவங்க வேண்டாம்னு முடிவு பண்ணி தேடினப்பதான் மஞ்சிமாமோகன் நடிச்ச ஒரு வடக்கன் செல்ஃபி’ பாத்தேன். அதுல அவங்க என் கதைக்கு தேவைப்படுற திருச்சி பெண் நிரஞ்சனவாக தெரிஞ்சாங்க. நான் அவங்கள மீட் பண்றவரைக்கும் அவங்க வேற ஒரு தமிழ்படத்துல நடிக்கிறாங்கன்னு தெரியாது.

உங்க படங்கள்ல ஹீரோ, ஹீரோயினத்தாண்டி எல்லா கேரக்டர்களுமே ஸ்கோர் பண்ணுமே ?

இந்த படத்துலயும் அதை பார்க்கலாம். அருள்தாஸ் அண்ணன், ஆர்ட் டைரக்டர் விஜய்முருகன், வேட்டையன் கவின், “வெளுத்துக்கட்டு”கதிர், இந்த நாலு பேரும் படத்துல முக்கியமான கேரக்டர்ஸ், நாலு கேரக்டர்களுக்குள்ளயும் ஒரு நெருக்கமான ரிலேஷன்ஷிப் இருக்கும். சரத் லோகிதஸ்வா, கன்னடத்துல தேசிய விருது வாங்கின தாரா மேடம் இரண்டு பேருக்கும் முக்கியமான கேரக்டர்ஸ். தாரா மேடம் தமிழ்ல “இங்கேயும் ஒரு கங்கை” படத்துல ஹீரோயினா நடிச்சவங்க. சுந்தரபாண்டியன் மாதிரி இதுலயும் எல்லா கேரக்டர்ஸ்ம் நமக்கு நெருக்கமா பதிவாவாங்க.

கிராமத்து படங்கள் அதுவும் நம்ம வாழ்வியலை பதிவு பண்ற உங்களை மாதிரியான ஆட்கள் சினிமால கம்மி. நீங்களும் சிட்டி பக்கம் போய்ட்டா

(கேள்வியை முடிப்பதற்குள்)

நான் இதுல பக்கா சிட்டிகுள்ள போகல. முதல்ல நாம இதுவரைக்கும் பார்த்த சினிமாவை சினிமாவாக்கலை. வேற்று மொழிபடங்களில் சிறந்த படங்களை நிறைய பார்ப்பேன். ஆனா அத எதையும் இங்க பதிவு செய்யணும்னோ படமாகணும்னோ யோசிச்சதில்லை. நம்ம வாழ்வியலை இயல்பா பதிவு செய்யணும்னு தான் யோசிப்பேன். அடுத்த படமே சென்னை சிட்டியை மையமா வெச்சு எடுக்க நேர்ந்தாலும் அதிலும் சென்னையின் எதார்த்த மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையும் தான் பதிவு செய்வேன். அது நம்மளோட நெருக்கமாக இருக்கிற மனிதர்களோட வாழ்க்கையாதான் இருக்கும்.

அஜித், விஜய்னு பெரிய ஹீரோக்கள் பக்கம் போயிருக்க வேண்டிய ஆளாச்சே நீங்க ?

சுந்தரபாண்டியன் ரிலீஸாகி பெரிய வரவேற்பு அடைஞ்சதும் நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்கள்ல ஒருத்தரை இயக்கற வாய்ப்பு வந்தது. ஆனா எனக்குனு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். என் பேர் கூட எவ்வளவு பேருக்கு ரீச் ஆகியிருக்குனு தெரியலை, ஒரே ஒரு படம் மூலமா நான் ஆசைப்பட்ட அந்த அடையாளம் கிடக்கிறது கஷ்டம். என்னோட அடையாளமா சுந்தரபாண்டியன மட்டுமே சொல்லிக்க விரும்பலை நமக்குனு ஒரு பத்து படைப்புகளை அழுத்தமா பதிவு பண்ணனும் அப்பதான் எனக்கென்று தனி அடையாளம் கிடைக்கும் என நம்புகிறேன். பெரிய ஹீரோ பின்னாடி போனா நான் காணாம போய்டுவேனோன்னு ஒரு பயம் வந்துச்சு. சினிமாங்கிறது பணம் மட்டுமே கிடையாது, நம்ம வாழ்க்கையே சினிமாதான்னு முடிவு பண்ணி எத்தனையோ கனவுகளோட உள்ளே வந்திருக்கோம் அதெல்லாம் நிறைவேறும் வரை இப்படியே இருக்கணும்னு தோணுது.

தெரிந்தோ தெரியாமலோ உங்க மேல விழுந்த சாதி அடையாளம் ?

சுந்தரபாண்டியன் விமர்சனங்கள் அப்படிதான் வந்தது. ஒரு கேள்வியாகவும் என் முன்னாடி வெச்சாங்க. நான் நேர்மையா ஒரு விஷயத்தை பதிவு பண்ண ஆசைப்படுறேன். சுந்தரபாண்டியன்ல சாதிங்ற அடையாளம் நான் வேணும்னு சேர்க்கலை, நான் வாழ்ந்த வாழ்க்கை அதுக்குள்ள இருக்கின்றதால முதல் கதை பண்ணும் போது இயல்பாகவே அது என் திரைகதையில வந்துடுச்சு. நம்மளோட பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள் தானே நம்ம கதையில பிரதிபலிக்கும் ?. உசிலம்பட்டி, தேனி தான் என் கதைகளம்னு முடிவானதும் நான் அங்கயே தங்கியிருந்தேன். அப்ப நான் கவனிச்ச ஒரு விஷயம் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட். அந்த பஸ் ஸ்டாண்ட்ல ஒரு இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான பெண்கள் தினமும் கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும் போவதை பார்த்தேன். ஆனா நான் பார்த்த கருத்தம்மா மாதிரியான படங்கள்ல பெண் குழந்தைகளை இந்த பகுதியில கள்ளிப்பால் ஊத்தி கொல்ற மாதிரிதான் காமிச்சுருந்தாங்க, அடடா… இது பழைய நிகழ்வின் பதிவாச்சே.. இப்ப இருக்கற நிலைமையை காமிக்கணும்னு முடிவு பண்ணித்தான் திரைகதையை அங்கிருந்து எழுத ஆரம்பித்தேன். அந்த ஊர்ல ஊர் நடுவுல தேவர் சிலையை வெச்சு கும்பிடறாங்க. அதை மறைத்து எப்படி நான் அந்த ஊரை பதிவு செய்ய முடியும். படத்தோட தொடக்கத்துலயே அதை நான் காட்டியதால் எனக்கு அப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்க போல. இனிமேல் அப்படி எதுவும் வந்துவிடக்கூடாதுனு இப்ப கவனமா இருக்கேன்.

யுவன் ஷங்கர் ராஜா இசை பெரிய பலமாச்சே ?

இரண்டாவது படத்துலயே ஹாரிஸ் ஜெயராஜ் கூட வொர்க் பண்ணிட்டேன். யுவன் கூட தயக்கமின்றி நெருக்கமாக அது பயன்பட்டிச்சு . ஒரு கதையை, காட்சியை யுவன் சாரோட மியூசிக் வேற இடத்துக்கு கொண்டு போய்டும். இது நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்லை. அழுத்தமான படம்ன்றதால யுவன் சார் தான் முதல் சாய்ஸ் ஆக இருந்தார். பாடல்கள் பாசிட்டிவான விமர்சனங்கள் வருது. பாடல்களை விட பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்ப சினிமா எப்படி இருக்கு ?

நாலு வருஷத்துல மூணு படம் இயக்கிருக்கேன். இருந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ற அளவுக்கு நான் வளரலைனு நினைக்கிறேன்.

யோசித்து தொடர்கிறார்..

தொடர்ந்து நல்ல நல்ல கதைகள் பதிவாகுது. பாலா சார், அமீர் சார், வெற்றிமாறன், ‘கற்றது தமிழ்’ ராம் மாதிரி நம்ம வாழ்வியலை அழுத்தமாக பதிவு பண்றவங்களை பார்க்கும் போது நமக்கே நிறைய நம்பிக்கை வருது. நிறைய புது இயக்குநர்கள் நல்ல கதைகளோட வர்றாங்க. சினிமா ரொம்ப நல்லா இருக்கு.