ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப் படுத்துவதுதான். அப்படிப்பட்ட செயலைத் தொடர்ந்து செய்வதில் சந்தோஷம் காண்பவர்கள் ‘ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’ என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பினர்.

சென்னை பகுதியின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம் தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது ‘புட்பேங்க்’ எனப்படும் உணவு வங்கி மூலம் வழங்கி வருகிறார்கள். அது மட்டுமல்ல இவர்களின் இன்ப அதிர்ச்சியான சேவைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன.

இவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுப்பது சாதாரணமானவர்களுக்கு கூட அல்ல. ஆதரவற்றோர், அனாதைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத்தான் இப்படி மகிழ்ச்சியூட்டி வருகிறார்கள்.

ஒரு முறை ஆயிரம் குழந்தைகளை சிறப்பு ரயில் வாடகைக்குப் பிடித்து திருப்பதிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சி தரிசனம் செய்யவைத்து அனைத்து செலவையும் ஏற்றுள்ளனர்.

இன்னொரு முறை 10,000 பேரை கிஷ்கிந்தா அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க அனைத்து விளையாட்டுகளிலும் விளையாட வைத்து களிப்பு மழையில் நனைய வைத்துள்ளனர்.

மற்றொருமுறை 2500பேரை சென்னையில் சர்க்கஸ் பார்க்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இவ்வாண்டு இப்படி என்ன செய்யப்போகிறார்கள் என்று தலைவர் விஜய் கோத்தாரி கூறும் போது :

”இவ்வாண்டு இப்படிப்பட்ட ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். இது நிதிவசூல் நிகழ்ச்சியல்ல. கட்டணம் எதுவும் இல்லை. அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்படுகிறது. இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை தர இருக்கிறார். இசைக்குழு ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் குழுவினர். இசைநிகழ்ச்சியில் கலக்கவுள்ளனர் ” என்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர்களும். திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கிறார்களாம். “தனக்கிருக்கும் பரபரப்பான வேலைகள் நடுவே இதற்கு நேரம் ஒதுக்கினார் தமன்.

கேட்டவுடன் சம்மதித்த அவரது பெருந்தன்மை ஆச்சரிய மூட்டியது. ” என்கிறார் விஜய் கோத்தாரி. ஏப் ரல் 19 ல் சென்னையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.