50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்‌ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்துள்ள நன்மைகளுக்காக அவரைப் புகழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்சினிமாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த சலுகைகள் இவைதான் என்று பலர் பாராட்டுகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், FEFSI ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ததுதான் இதன் தொடக்கப்புள்ளி. ஒரு முக்கியமான தருணத்தில், படத் தயாரிப்புகளை நிறுத்தி FEFSI உடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல விஷயங்களை நெறிப்படுத்தினார். அதுவரை அவை யோசித்த பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தன. இந்தச் செயலே, அவருக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. இதனால்தான் அவர் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராகாவும், திரையரங்கு உரிமையாளர்கள், மாநில அரசு உள்ளிட்ட பல தரப்பினரிடம் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் விஷால் போராட்டத்தைத் தொடங்கியபோது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இன்று தமிழ்த் திரையுலகமே மகிழ்ச்சியிலும் கொண்டாட்ட உணர்விலும் திளைக்கிறது. அவர்கள் அனைவரும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி சொல்கின்றனர். நல்ல மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 100% கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் வெளிப்படைத்தன்மை. பார்வையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு அனுமதித்த கட்டணங்களுக்குட்பட்டு படத்துக்கேற்றபடி டிக்கெட் விலை வைத்துக்கொள்வதற்கான வசதியுடன் (ஃப்ளெக்ஸிபில் டிக்கெட்டிங்) 3 அடுக்குகளில் டிக்கெட் கட்டணங்கள், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட திரையரங்குகளில் இருக்கும் ஈ.சினிமாவில் 50% விலை குறைப்பு, (டி-சினிமாவுக்கான விலை அதற்காக அமைக்கப்பட்டுள்ள தென்னிந்திய கூட்டு செயல்பாட்டுக் குழுவால் நிர்ணயிக்கப்படும்) உள்ளிட்டவை திரையுலகினருக்கு வெற்றியை உறுதிசெய்யும் விளைவுகள்.

ஒரு வாரத்துக்கு ரூ.5000/-, படத்தின் முழு ஓட்டத்துக்கு ரூ.10,000 மற்றும் ஒரு காட்சிக்கு ரூ.250 என்ற கட்டண முறையை க்யூப் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த கட்டண முறை ஆறு மாதங்களுக்கு சோதிக்கப்படும். அதற்குள் இதை நிரந்தரமாக்கிவிடுவோம் அல்லது இது சரியாகப் பயனளிக்கவில்லை என்று கட்டணங்களை மாற்றச் சொல்வோம் என்று அரசு மற்றும் திரையுலக அமைப்புகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சொன்னார் விஷால்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் சாதனைகள் இந்திய திரையுலகில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. விஷாலின் நோக்கமும் மன உறுதியும் அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளன என்று அண்மைக் காலங்களில் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.