காற்று வெளியிடை – விமர்சனம்


சீனியர் இயக்குனர்களில் இன்னும் இளைஞர்களிடம், புதிய தலைமுறை ரசிகர்களிடம் கிரேஸ் குறையாமல் இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காற்று வெளியிடை’ மூலம் அதை தக்கவைத்துள்ளாரா..? பார்க்கலாம்.

பொதுவாக பெண் ஒருவள் தனது காதலை ஏற்கும் நாள் வரை தன்னை ஒரு டபுள் கிளாஸ் ஜென்டில் மேனாக காட்டிக்கொள்ளும் ஆண்கள், அவள் காதலை பெற்று விட்டால் போதும் ஆண்களுக்கே உரிய கல்யாண குணங்களை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இதைத்தான் காற்று வெளியிடை படஹ்தில் தனது பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் மணிரத்னம்.

ஸ்ரீநகர் ராணுவ கேம்ப்பில் பைட்டர் பைலட் என்கிற, போர் விமானத்தின் பைலட் கார்த்தி.. மன்மதன் பணியில் பார்க்கும் பெண்களுக்கெல்லாம் அம்பு விட்டாலும், இவர் மனதை தைப்பது என்னவோ ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு டாக்டராக வரும் அதிதி தான். கூடவே இறந்துபோன தனது நண்பனின் தங்கை தான் அதிதி என்பதும் தெரியவர இருவருக்கும் ஈர்ப்பு அதிகமாகிறது…

இருவரும் ஒருகட்டத்தில் காதலையும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் கார்த்தியின் முரட்டுத்தனமான, பிடிவாதமான,. பல நேரங்களில் பெண்ணை பெண் என்று மதிக்காத குணம் அதிதியின் தன்மானத்துடன் அடிக்கடி உரசி அவர் மனதை காயப்படுத்துகிறது.. ஆனால் அந்த சமயங்களில் தனது ரொமான்ஸால் அதிதியை கூல் பண்ணுகிறார் கார்த்தி..

ஒருகட்டத்தில் இது பெரிதாக கார்த்தியை விட்டு விலகி ஸ்ரீநகரை விட்டே வெளியேறுகிறார் அதிதி… இந்தசமயத்தில் கார்கில் போர் வரவே, போரில் ஈடுபடும் கார்த்தியின் விமானம் விபத்துக்குள்ளாகிறது.. துரதிர்ஷ்டவசமாக, கார்த்தி பாகிஸ்தான் நாட்டுக்குள் விழ, அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்..

அஆனாலும் மனதில் இருக்கும் காதல் உயிர்வாழ உந்தித்தள்ள சிறையில் உள்ள இரு நண்பர்களுடன் தப்பிக்க முயற்சி செய்கிறார் கார்த்தி. அவரால் தப்பிக்க முடிந்ததா..? மீண்டும் காதலியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா..? பிரிந்துசென்ற அதிதி என்ன ஆனார்..? என்பதற்கு க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.

பைட்டர் பைலட்டாக கார்த்தியின் உருமாற்றம் நம்மை வசீகரிக்கிறது.. அதிதியை தனது காதல் வலையில் விழவைக்கும் காட்சிகள் இளசுகளுக்கு உற்சாக டானிக்காக இருக்கும்.. ஆனால் கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்ட் பாணியில் அதிதியின் தன்மானத்துடன் அவர் மோதும்போது என்னதான் அவரது சுபாவம் என்றாலும் கூட, ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே கோபத்தை வரவைக்கிறார் கார்த்தி.. ஒருவேளை இதுகூட அவரது கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாம்..

கதைக்கு ஏற்ற பொருத்தமான ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதரி.. கண்களிலேயே ஆயிரம் கதை பேசுகிறார்.. காதல், கோபம், சிணுங்கல், சீறல், தன்மானம் என எல்லா ரசங்களையும் காட்சிக்கு ஏற்றாற்போல் பிழிந்து கொடுக்கிறார்.. ஆனால் ஒருகட்டத்தில் அதுவுமே திகட்டத்தான் செய்கிறது..

அதிதியின் நண்பர்களாக வரும் ஆர்ஜே பாலாஜி, ருக்மணி ஆகியோருக்கு படம் நெடுக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. டெல்லி கணேஷ் உட்பட படத்தின் மற்ற துணை பாத்திரங்கள் அளவோடு பயன்படுத்தப்பட்டு இருப்பது சிறப்பு.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் வசீகரிக்கவில்லை என்பதே உண்மை. படத்தின் டபுள் ப்ளஸ் என்றால் அது ஒளிப்பதிவு தான் ஸ்ரீநகரின் கலவரமூட்டாத இயற்கை அழகை மட்டுமே அள்ளி எடுத்து வந்துள்ளது ரவிவர்மனின் கேமரா..

இது மணிரத்னத்தின் படம் என்பதற்கான கட்டிய கூறுதல் ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.. இன்றைய இளைஞர்கள், அதிலும் நல்ல பொறுப்பான பதவிகளில் இருக்கும் ஆணும் பெண்ணும் கூட காதலை எந்தவித கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள் என்பதை தனது பாணியிலேயே சொல்லி இருக்கிறார் மணிரத்னம்..

காதலி தனக்குரியவளாக மாறியபின் கார்த்தியின் அவ்வப்போது வெளிப்படும் குண நலன்களுக்கு அவரது குடும்பத்தின் பின்னணியையும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.. இருந்தாலும் பல கேள்விகள் நமக்குள் எழவே செய்கின்றன.. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செதுக்கியிருக்கலாம்.