கயிறு – விமர்சனம்


படத்தின் நாயகன் குணா கிராமத்தில் வாழ்ந்து வருபவர். அவரது தந்தையைப் பின்பற்றி அவரும் பூம்பூம் மாட்டுக்காரர் தொழிலை செய்து வருகிறார். பூம்பூம் மாட்டுக்காரர் ஆக அவர் குறி சொல்லி தனது வாழ்க்கையை கழித்து வருகிறார். இந்நிலையில் அவர் தவறாக குறி சொல்லி விட்டதாக அந்த கிராமத்தின் தலைவர் அவரை கண்டிக்கிறார். இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யுமாறு கூறுகிறார்.

இதனால் மனமுடைந்த நாயகன் குணா அந்த கிராமத்தை விட்டு வேறு கிராமத்திற்கு செல்கிறார். அங்கு நாயகி காவியாவை சந்திக்கிறார். இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் இவர்களின் காதலுக்கு நாயகியின் தாய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நாயகி காவியாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் காவியா அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்.

இதனால் ஒரு நிபந்தனையோடு குணாவை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் நாயகியின் தாய். அந்த நிபந்தனை என்னவென்றால், நாயகன் குணா பூம்பூம் மாட்டுக்காரர் தொழிலை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்பதுதான்.

நாயகன் குணா தனது தொழிலை விட்டாரா?நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது.

நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.

படத்தின் இயக்குனர் கணேஷ் கிராமத்தில் நடைபெறும் எதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார். கதையை விறுவிறுப்பாகவும் அமைத்திருக்கிறார்.

பின்னணி இசை படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ஒரு அழகிய படைப்பாக வெளிவந்திருக்கிறது இந்த ‘கயிறு’ திரைப்படம்