‘நெட்டிசன்’கள் கையில் சிக்கிய ‘வை ராஜா வை’..!

இந்த நெட்டிசன்கள் இருக்கிறார்களே.. இவர்களில் சினிமா ஏரியாவில் புகுந்து ஆட்டம் காட்டுபவர்களில் இரண்டுவகை ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு குரூப், மிக முக்கியமான இயக்குனரின் படம் வெளியான அன்றே அது இந்தப்படத்தின் காப்பி என்று அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிடுவார்கள்..

இன்னொரு குரூப் இருக்கிறார்களே.. அவர்கள் ட்ரெய்லர் வெளியானதுமே தங்களது கணக்குகளை நேர் செய்து, இது இந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று பத்து நிமிடங்களில் சொல்லிவிடுவார்கள்.. போஸ்டர் டிசைனை வைத்தே ஜட்ஜ்மெண்ட் பண்ணும் சில மதியூகிகளும் இந்த லிஸ்ட்டில் உண்டு.

இப்போது இரண்டாவது வகை ஆட்களிடம் தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படம் சிக்கியுள்ளது. இந்தப்படம் ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு ராபர்ட் லுகெடிக் இயக்கிய ’21’ என்ற படத்தின் அப்பட்டமான தழுவல் என்று முரசடிக்க ஆரம்பித்துள்ளார்கள்..

புத்திசாலி மாணவனான நாயகன் நகரத்தில் உள்ள சூதாட்ட கிளப்புகளுக்கு அவனது பேராசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டு சூதாட்டம் ஆட வைக்கப்படுகிறான். அவனிடம் உள்ள கணக்குத் திறமையால் இருவரும் பல டாலர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் சூதாட்ட கிளப்புகளில் பிரச்சனைகள் எழ, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ’21’ படத்தின் கதை.

அந்தவகையில் ‘வை ராஜா வை’ படத்தின் போஸ்டர் டிசைன்கள்,ட்ரைலர், கதாபாத்திரங்கள், மற்றும் கதைக்களம் ஆகியவற்றைப் பார்க்கும்போது ’21’ படத்துடன் அதிகமாகவே ஒத்துப்போகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.. இந்தப்படத்தை ஹாலிவுட் படம்போல ஐஸ்வர்யா எடுத்துள்ளார் என்று யூனிட்டார் சொல்லி வருகின்றனர். ஹாலிவுட் படத்தைத்தான் எடுத்திருப்பாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. விடை நாளை தெரிந்துவிடப்போகிறது.