அஜித் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?

இருக்கட்டும்.. அல்டிமேட் ஸ்டார், தல, அடுத்த சூப்பர்ஸ்டார் என எத்தனை பட்டங்கள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.. ஒரு சாதாரண அப்புக்குட்டியை வரவழைத்து படம் எடுத்துவிட்டதால் அவரது எளிமையும் சாதாரண நடிகர்களிடம் பந்தாவாக பழகும் குணம் இல்லாதவர் என்பதும் தெரிகிறது. தன்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு தனது காசில் வீடுகட்டி கொடுக்கிறார். அது அவரது மனித நேயத்தை காட்டுகிறது.

விளம்பர படங்களில் நடித்து மக்களை ஏமாற்றும் வேலையை செய்யாமல் இருக்கிறார். ஓட்டுப்போட மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்கிறார்.. தன்னை சமூகத்தில் ஒரு சாதாரண மனிதனாக அவர் முன்னிறுத்துவதை காட்டுகிறது. எல்லாமே நல்ல விஷயங்கள் தான்.

ஆனால் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லை. திரையுலகம் ஒன்று கூடி நடத்தும் போராட்டங்களிலும் பங்கெடுப்பதில்லை. அவ்வளவு ஏன் அவரது படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்வதில்லை.. அது அவரது உரிமை என்றாலும் இந்த விழாக்களில் கலந்துகொள்வதுதானே ரசிகர்கள் அவரை அடிக்கடி பார்க்க வழிவகை செய்யும்.. அதைக்கூட செய்யாவிட்டால் எப்படி..? ரசிகர்கள் இல்லாமல் இவர் வளர்ந்துவிடவில்லையே.. ஆனால் ரசிகர்கள் முதலில் தனது வீட்டை கவனிக்கட்டும் என அதற்கும் தயாராக ஒரு பதில் வைத்திருக்கிறார்.

சரி.. அதெல்லாம் போகட்டும்.. திரையுலகில் தனது நண்பர்கள் சிலரின் இல்லத்து விஷேசங்களில் கலந்துகொள்கிறார். ஆனால் திரையுலகில் மூத்த ஜாம்பவான்களான, நமது தமிழ் சினிமாவின் பெருமையை ஒருபடி உயர்த்திய, கமல், ரஜினி என்கிற இரு சூப்பர்ஸ்டார்களும் தலைவணங்குகின்ற, பாலுமகேந்திரா, இயக்குனர் சிகரம் பாலசந்தர், சமீபத்தில் காலமான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என ஒருவருடைய மரணத்திற்கு கூட இறுதி மரியாதை செலுத்த அஜித் வரவில்லை.

அந்த சமயங்களில் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்தால் கூட, வந்தபின்னர்கூட துக்கம் விசாரிக்க சென்றதாக கூட ஒரு தகவலும் இல்லை. அட்லீஸ்ட் ஒரு இரங்கல் அறிக்கை கூட விடுத்தது இல்லை. சமீபத்தில் மறைந்த மாமேதை எம்.எஸ்.வி முதலில் ஒரு நடிகராக மாறியதே, அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தில் தான். பந்தா, விளம்பரம் வேண்டாம் என ஒதுங்குவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் திரையுலகை சேர்ந்த ஒருவரது துக்க நிகழ்வில் ஊரே கலந்துகொள்ளும்போது அஜித் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?

சமூக வலைதளங்களும் மீடியாக்களும் அஜித்தின் இந்த போக்கை கண்டிக்கவேண்டும்.. வரும் காலங்களில் அஜித் தனது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். இதுதான் ஒரு ரசிகன் அல்லாத நடுநிலை பார்வையாளனின் விருப்பம்.