திலீப் சுப்பராயன் மாஸ்டரிடம் ஜெய்யின் பாச்சா பலிக்குமா..?


நன்றாக வளரவேண்டிய நடிகர்.. ஆனால் பாவம்.. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாய், படப்பிடிப்புக்கு வராமல் சொதப்புவது, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பது என பல சிறப்பம்சங்களையும் தனக்கு கிரீடமாக மாட்டிக்கொண்டவர் தான் ஜெய்.. அதனால் இவர் நடித்த படம் வருடத்திற்கு ஒன்று ரிலீசானாலே அதிசயம்.. அதுகூட மூன்று நான்கு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு யார் புண்ணியத்தாலோ இப்போது ரிலீஸாகும் யோகம் பெற்றவையாக இருக்கும்.

அவருக்கு ‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் கொடுத்து அவரை உயர்த்திவிட்ட சரவணனுக்கே அவர் ‘வலியவன்’ படத்தில் தண்ணி கட்டினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனாலேயே ஜெய்யை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பளர்களும், அவரிடம் கதைசொல்ல இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர்.

இந்தநிலையில் தான் இரண்டு படங்களில் நடிக்க ஒப்ந்தமாகி இருக்கிறார் ஜெய். இது தனக்கு மறுவாழ்வு என உணர்ந்து சரியான நேரத்திற்கு சொன்னபடி நல்லபிள்ளையாக நடித்துக்கொடுத்தால் அவரது கேரியர் உயரும் என்கிறார்கள் அவரைச்சேர்ந்தவர்கள். இன்னொரு பக்கம் ஜெய் நடிக்கும் ‘பலூன்’ என்கிற படத்தை தயாரிக்கும் தயாரிப்பலர்களில் திலீப் சுப்பராயன் மாஸ்டரும் ஒருவர். அவருக்கு ஜெய்யை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்கிற வித்தைகள் நன்றாகவே தெரியும் என்பதால் தெம்பாக இருக்கிறார்களாம் பலூன் படக்குழுவினர்.