இயக்குனர் ‘கவுதம் மேனன்’ கௌரவ தோற்றத்தில் ‘கோலி சோடா 2’!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , ” இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. நான் நினைத்ததை விட மேலும் சிறப்பாக’கோலி சோடா 2’ உருவாகிவருகிறது”

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ‘கோலி சோடா 2’ படத்தின் டீஸருக்கு ‘வாய்ஸ் ஓவர்’ தந்தது இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனே என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக வைத்து பிண்ணப்பட்டுள்ள இக்கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனியின் ‘Rough Note’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சீனி, வினோத் , பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, செம்பன் ஜோஷ் மற்றும் ஸ்டன் ஷிவா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.