தொட்டு விடும் தூரம் – விமர்சனம்


படத்தின் நாயகன் விவேக்ராஜ் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனத்தில பணிபுரிகிறார். அது மட்டுமல்லாமல் தனது அம்மா சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்கிறார்.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியின் என்.எஸ்.எஸ். முகாம் நாயகனின் ஊரில் நடக்கிறது. அதற்காக அக்கல்லூரி மாணவர்கள் வருகின்றனர். அதில் நாயகி மோனிகாவும் ஒருவர்.

இந்நிலையில் நாயகிக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினையில் இருந்து மோனிகாவை காப்பாற்றுகிறார் விவேக்ராஜ். இதனால் இருவருக்குமிடையில் காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைவரும் சென்னை செல்கின்றனர். இதனால் காதலர்கள் பிரிய நேரிடுகிறது.

தனது காதலி மோனிகாவை தேடி சென்னை செல்கிறார் நாயகன் விவேக்ராஜ். சென்னை செல்லும் நாயகன் விவேக்ராஜ் சில பிரச்சினைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர், பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா? காதலியை சந்தித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார்.

நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார்.

படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது நாயகனுக்கும், நாயகிக்குமிடையேயான இடையேயான கெமிஸ்ட்ரி. நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தனது அனுபவ நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்கிறார் சீதா. தனது தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் போது அனைவரையும் நெகிழ வைக்கிறார்.

மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் காதல், அம்மா-மகனுக்கு இடையேயான பாசத்தை ஆழமாக கூறியுள்ளார்.
கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.

இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம் அருமை.

பின்னணி இசையில் நோகா பிரவீன் இமானுவேல் கவனிக்க வைக்கிறார். ராம்குமார் தனது ஒளிப்பதிவால் கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

ஆக மொத்தம் ஒரு காதல் பயண அனுபவத்தை தருகிறது இந்த “தொட்டு விடும் தூரம்” திரைப்படம்.