உலகம் முழுவதும் சுமார் 7ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகும் ரஜினியின் தர்பார்!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள படம் தர்பார். இப்படத்தின் பிரிமியர் காட்சி இன்று அமெரிக்காவில் திரையிடப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரம் முன்னதாகவே நாளை முதல் (ஜன.9) உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. நாளை தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் வேறு எந்தப்படமும் ரிலீஸ் அறிவிப்பை வெளியிடவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது இதுவரை வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரடியூசர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

இதுவரை இந்திய படங்களிலேயே இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக படம் உருவாகி இருக்கிறது. ரஜினி சாரை 15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே உற்சாகம் நமக்கு கிடைக்கும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது. காமெடி, ஆக்ஷன், வேகம், ஸ்டைல் என்று ரஜினி கலக்கி இருக்கிறார். பெண்களுக்கும் இது முக்கியமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ரஜினி, முருகதாஸ் இருவருக்கும் இது பெரிய பிளாக்பஸ்டராக அமையும். படத்தை விளம்பரப்படுத்த மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. இதுவும் ஒரு சாதனை தான். உலகம் முழுக்க 7 ஆயிரம் தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தது போல் நடித்துள்ளார். அந்த காட்சிகள் பயங்கரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.