சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட ஒழுங்குபடுத்தும் அமைப்பு தேவை! – ப்ளூ சட்டை மாறன்

மகிழ் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கபளிஹரம்’. செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன், திரைப்பட விமர்சகரும், இயக்குநருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் படத்தின் நாயகனும் இயக்குநருமான தக்சன் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநரும், நாயகனுமான தக்சன் விஜய் பேசுகையில்,

” கபளிஹரம் என்பது திருட்டு, கவர்தல் இது போன்ற பொருள் தரும். சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற உண்மையான ஒரு திருட்டுச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் இது. வேறு மாநிலத்திலிருந்து திருடர்கள் தமிழகத்திற்கு வந்து, திருடிவிட்டுச் செல்கிறார்கள். அதனைத் தமிழக போலீசார் திறமையுடன் துப்பறிந்து அவர்களைக் கைது செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதனைத் தழுவி ‘கபளிஹரம்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் மைம் கோபி போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் யோகிராம் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் ‘ப்ளூ சட்டை’ மாறன் பேசுகையில்,

” தற்போதைய சூழலில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது பெரிய விஷயமல்ல. அதனை எப்படி மக்களைச் சென்றடையும் வகையில் வெளியிடுவது என்பதுதான் கடினமான வேலை.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் என்னுடைய இயக்கத்தில் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. தற்போது கூட என்னுடைய நண்பர்கள் உன்னுடைய படம் எப்போது வெளியாகிறது? எனக் கேட்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக என்னுடைய திரைப்படம் இருந்தது.
ஒரு சிறிய பட்ஜெட் படத்தை மக்களைச் சென்றடைய வைப்பதில் கடினமான சூழல் இன்றும் தொடர்கிறது. இதனை எப்படி ஒழுங்குபடுத்தி வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் ஏதேனும் ஒரு முடிவு எடுத்துச் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றார்

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்,

” இன்றைய தேதியில் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கின்றன. திரையுலகப் பிரபலங்களின் பேச்சுகளை, பார்வையாளர்களைக் கவர்வதற்காகத் தலைப்பைத் தவறாக வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வறுமையிலும் வள்ளலாக வாழ்ந்தவர் மறைந்த நடிகர் என் .எஸ். கிருஷ்ணன். அவரின் வழியைப் பின்பற்றித்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வள்ளலாக வாழ்ந்தார். என்.எஸ் கிருஷ்ணனின் நாடகக்குழுவில் எம்ஜிஆர் நடிக்கும் போது அவருக்கு மாத ஊதியமாக நூறு ரூபாய் வழங்கப்பட்டது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், முதலீட்டை எங்கிருந்து பெறுவார்கள்? திரையரங்கத்தில் டிக்கெட் விலையை உயர்த்தித்தான் பெற வேண்டும். 1000, 500 என்று டிக்கெட் விலை இருக்கும். இது யாருடைய பணம்? ஏழைகளின் பணம்..! மக்கள் இன்று வசதியாக வாழ்கிறார்களா..? இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், ஏழைகளுக்கு மனமுவந்து உதவ வேண்டும். ஏழை ரசிகர்களை அவர்கள் மதிக்க வேண்டும். அதனால் இவர்கள் கடைசிக் காலகட்டம் வரை வள்ளலாக வாழ்ந்த என்.எஸ். கிருஷ்ணனின் வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதைத் தவிர நான் யாரையும் பழி சொல்லவோ.. அவதூறாகவோ.. பேசவில்லை.

கபளிஹரம் என்பது கொள்ளை அடிப்பதற்குச் சமம். அடுத்தவன் பொருளைக் கபளிஹரம் செய்வது, தனதாக்கிக் கொள்வது, மோசடியால்… தில்லுமுல்லுகளால்… பொய்யால்… வஞ்சனையால்… அடுத்தவன் சொத்தை கபளிஹரம் செய்து கொள்வது. கடந்த காலங்களில் மூன்றுவிதமான திருட்டுகள் சமூகத்தில் இருந்தது. இதில் மூன்றாவதாக மக்களை அடித்து, சித்திரவதை செய்து, அவர்களிடம் இருக்கும் பொருளைக் கொள்ளையடித்துச் செல்வது. இது பல ஆண்டுகளுக்கு முன் திடீரென்று வடநாட்டிலிருந்து வந்த திருடர்களால் தமிழகத்தில் நடைபெற்றது. இந்த கொடூரமான இரக்கமற்ற செயலை வடமாநிலக் கொள்ளையர்கள் தமிழகத்தில் நிகழ்த்தினர். அதனைத் தமிழக போலீசார் திறமையாகச் செயல்பட்டு, அவர்களைக் கண்டுபிடித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தனர். கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று இதைப்போன்ற கதையைக் கொண்ட ஒரு படம். ஆனால் கபளீகரம் வேறு விதமான கதை அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இயக்குநர் தக்ஷன் விஜய் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். படத்தின் டீசரில் இயக்குநரின் முதிர்ச்சியான அனுபவம் தெரிகிறது. சிறிய பட்ஜெட்டுக்குள் தரமான படைப்பாக உருவாக்கி இருக்கிறார்.

தம்பி மாறன் சொன்னதைப் போல் இந்த படத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்லப் போகிறீர்கள்? தற்போதுள்ள திரைப்பட சங்க அமைப்புகள், சிறு பட்ஜெட் படங்களுக்கு உதவத் தயாராக இல்லை. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டில் உள்ள சிக்கல்களைக் கண்விழித்து அயராது பாடுபட்டுத் தீர்க்கிறார்கள். ஆனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்குவதில்லை.

அதனால் படக்குழுவினரின் தனித் திறமையால் தான் இப்படம் வெளியாக வேண்டும். யாருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் கிடைக்காது. ஆனால் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் இந்த திரைப்படத்தைத் திரையரங்கத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். டிஜிட்டல் தளங்களில் வெளியிடவும் முயற்சி செய்யுங்கள்.

சிறிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் தயாராகவேண்டும். இவர்களால்தான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் தொடர்ந்து கிடைக்கிறது. அதனால் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களின் சேவை.. திரைப்படத்துறைக்குத் தேவை என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தித் தெரிவிக்கிறேன்.

300 கோடி… 400 கோடி… பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம், மும்மடங்காக அதிகரித்து வழங்க வேண்டும். இதனை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கும், கோடிக்கணக்கான பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படுவதை ஏற்க முடியாது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

வருடத்திற்கு நூற்றுக்கணக்கில் தயாராகும் சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் முதலீடு மீண்டும் திரும்பக் கிடைப்பதில்லை. சிறிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் முதலீடு மீண்டும் கிடைத்தால்.., அவர்கள் தொடர்ந்து படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், அவர்களின் படம் வெற்றி அடைந்தாலும், தோல்வியடைந்தாலும் மீண்டும் அவர்களின் முதலீடு, ஒருசிலரைத் தவிர பலர் மீண்டும் திரைத்துறையில் முதலீடு செய்வதில்லை. ” என்றார்.

படத்தின் டீசரை தயாரிப்பாளர் கே ராஜன் வெளியிட,‘ ப்ளூ சட்டை’ மாறன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்……