அட்ரஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழா

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர் நடித்துள்ளார்கள்.

இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையாமாக கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இபடத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் அழகன் மணி பேசியதாவது…

என் மகன் இப்படத்தின் தயாரிப்பாளர் நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்து இந்த துறைக்கு வந்தவன். நான் போட்டு வந்த பாதையை என் மகன் பின்பற்றுவான் என நம்புகிறேன். நான் தலைசிறந்த படைப்புகளையே தயாரித்துள்ளேன். என் மகன் தயாரித்துள்ள இப்படமும் நல்ல படைப்பாக இருக்கும். இயக்குநர் இராஜமோகன் என் செல்லபிள்ளை, முழு சுதந்திரம் தந்து இப்படத்தை இயக்க சொன்னேன் நன்றாக இயக்கியுள்ளார். உங்களில் இருந்து வந்தவன் நான் ஆதலால் இப்படத்திற்கு நீங்கள் உங்கள் ஆதரவை முழுமையாக தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் திரைத்துறையில் இருந்த காலத்தில் கதைக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்போம்.பேசி பேசி திரைக்கதை தயாராக ஒரு வருடம் ஆகும். அடுத்ததாக என் தம்பி ஒரு படத்தை என் அலுவலகத்தில் அப்படி உருவாக்கி வருகிறார். பல நல்ல படைப்புகள் தொடர்ந்து வரும் இங்கு இப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது…

இயக்குநர் இராஜமோகனின் ‘அட்றஸ்’ என்னவென்று சொல்லப்போகும் படம். என்னிடம் ஏய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அவர் பல வருடங்களாக இந்த கதையை செய்து வந்தார். ஒரு முறை என்னிடம் சொன்னார். அப்போது நான் நடிப்பதாக இல்லை. அந்த கதை என்னை மிகவும் பாதித்தது பல காலமாக அந்தப்படம் எப்போது எடுக்கிறீர்கள் என கேட்பேன், பின் அழகன் தமிழ்மணி ஐயா எடுக்கிறார்கள் என்றார்கள். சந்தோசமாக இருந்தது. என்னை ஒரு கேரக்டர் இருக்கிறது நடியுங்கள் என கேட்டார்கள் மகிழ்ச்சியோடு நடித்தேன். இப்படத்தில் ஒரு வசனம் வரும்,
“ஆதார் உனக்கு அட்ரஸ்.. ஆனால் அது எனக்கு வாழ்க்கை..”

ஒப்படி முழுப்படத்தை ஆதார் கார்டை வச்சு மிகப்பிரமாதமாக கதை அமைத்துள்ளார். அழகன் தமிழ்மணி ஐயாவின் மகன் அஜய் கிருஷ்ணா மிக அற்புதமாக படத்தை ஒருங்கிணைத்தார். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….

நான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். டிராஃபிக் ஜாம். இப்படத்தின் பாடல் நன்றாக இருக்கிறது, டிரெய்லர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள் என் கருத்து என்னவென்றால் என் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் பின் டெக்னிஷுயன், நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது மக்கள் கூட்டமாக வருகிறார்கள். சினிமாவில் தயாரிப்பாளர்கள் எங்க ஆட்கள் சரியில்லை, பின்னால் இழுப்பதில் குறியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா பற்றி நடிகர் பற்றி யாரைப் பற்றியும் பேசவில்லை. பேசினால் பிரச்சனை வருகிறது. ரசிகனை விட்டு மிரட்டுகிறார்கள். ரசிகனை விட்டு மிரட்டினால் அவ்வளவுதான். கமல் ரசிகர்கள் மிரட்டியபோது அவர்களை ஜெயிலுக்கு அனுப்பினேன். ஆனால் கடைசியில் அவர்களை நான் தான் பெயில் எடுத்தேன். ஒவ்வொருவரும் ஏழைகள். அவர்களை தூண்டிவிட்டவர் வரவில்லை. கமல் என்னை திட்ட ஆள் ரெடி செய்து அனுப்பிவிட்டு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் உலக நாயகனால் உள்ளே போனார்கள். அந்த கேஸ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன். தர்மம் செய்யுங்கள். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தம்பி இறந்து விட்டார் அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்துள்ளார் ஆனால் இந்த தம்பி அதை தொடர்ந்து நடத்தியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த தம்பி தான் இல்லையென்றால் யார் நடத்துவார்கள் என 8 கோடி ரூபாய் பேங்கில் போட்டு வைத்து, தான் இல்லாவிட்டாலும் இது தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார் அது தான் புண்ணியம். இங்கு யார் செய்கிறார்கள். இந்தப்படம் அட்ரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் பேசியதாவது…

என்னுடைய மாமனிதன் படத்தின் விழாவை பாண்டிச்சேரியில் ஏன் வைத்தேன் என பத்திரிகை நண்பர்கள் வருத்தப்பட்டார்கள். உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி எனது மாமா அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தவர். அவருக்கு இப்போது படம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சினிமா காதலில் செய்கிறார். இப்போது ஒரு சூழல் இருக்கிறது. சாட்டிலைட் டிஜிட்டல் எல்லாம் சில படங்களுக்கு முதலில் விற்று லாபம் வந்து விடுகிறது. அந்த வகையில் இந்தப்படத்திற்கு நல்ல டாக் உள்ளது இந்தப்படத்தை ஓடிடியில் விற்க நினைத்தால் அதற்கு என்ன உதவி செய்யவும் நான் தயார். அப்பா தயாரிப்பாளர் கே ராஜன். அப்பா வலி எனக்கு தெரியும் அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்றும் தெரியும். அவரோட மினி வெர்ஷன் தான் நான். நாங்கள் இருவரும் மனசிலிருந்து தான் பேசுவோம். நாங்கள் சினிமாவிலிருந்து பாக்கெட்டில் போட்டுகொண்டு போனதில்லை. சினிமாவில் கொடுத்தது வராது ஆனால் ஒரு 1000 பேரை வாழ வைக்க வேண்டும் என்று தான் இந்த தொழில் செய்கிறோம். தயாரிப்பாளர்களின் நிலைமை இன்று மிக மோசமாக இருக்கிறது. நாங்கள் படமெடுத்தால் 200 பேர் அன்று சாப்பிடுவார்கள். பிரச்சனை உள்ள படங்களை எடுக்கிறாய் என்று சொன்னார்கள் பின் எதற்கு நான் சங்கத்திற்கு வந்தேன். எனக்கு ஒரு ரூபாய் வேண்டாம். படத்தின் பிரச்சனை முடிந்து, படம் ரிலீஸானால் நாலு பேர் நன்றாக இருப்பார்கள். ஒரு படம் ஓடவில்லை உடனே எல்லோரும் திட்டுகிறார்கள், உன் அண்ணன் தம்பி என்றால் திட்டுவாயா?. ஒரு பெரிய படம் வாங்கினால் நாலு சின்ன படங்களையும் ஓடிடியில் வாங்குங்கள். நல்ல படம் கண்டிப்பாக ஓடும். இப்போது தயாரித்து நடித்து விநியோகம் செய்வது அவ்வளவு ஈஸி கிடையாது. அவ்வளவு டார்ச்சர் செய்கிறார்கள். நான் சம்பாதித்தால் ஒரு ரூபாய் எடுத்து போக மாட்டேன் தயாரிப்பாளருக்கு தான் செய்வேன். நான் தயாரிப்பாளர் சங்க தலைவராக வந்தால் எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். தயாரிப்பாளர் தான் கடவுள். கேரளா தெலுங்கில் அப்படிதான் இருக்கிறது.
அட்ரஸ் எனும் இப்படம் பெரிய இடத்தை போய் சேர வேண்டும். தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா எனது மருமகன் நன்றாக வர வேண்டும். சினிமா வாழட்டும் நன்றி.

நடிகை தியா பேசியதாவது,

எல்லோருக்கும் வணக்கம். இது எனது முதல் தமிழ் படம். இந்த வாய்ப்பை எனக்களித்த இராஜமோகன் சார் மற்றும் அஜய் சாருக்கு எனது நன்றிகள். உங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் என்னுடன் எப்போதும் இருக்கும் என நான் நம்புகிறேன். நன்றி

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது,

அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த படத்தோட இசை வெளியீடு எப்போது நடக்கும் என்பது எனக்கும், இராஜமோகனுக்கும் பெரிய ஆர்வமாக இருந்தது. இது நடக்குமா என்ற சந்தேகத்தை தாண்டி, இப்போது நடந்து கொண்டிருப்பது, எங்களுக்கு சந்தோஷத்தை தாண்டிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இராஜமோகனுக்கும், எனக்குமான பயணம் 2016-ல் தொடங்கியது. இந்த படம் எனது சிறந்த படமாக இருக்கும் என உறுதியாக நான் நம்புகிறேன். இராஜமோகன், எனக்கு அவர் தான் முதல் தேசிய விருதை வாங்கி தருவேன் என எப்போதும் கூறுவார், அது நடந்தால் நன்றாக இருக்கும். இந்த படத்தின் பாடல்களை சினேகன் சிறப்பாக எழுதியுள்ளார். அவ்வளவு அழகாக வந்துள்ளது. மிகவும் புதுமையான கதை, எல்லா இசையமைப்பாளர்களும் விரும்பும் கிராம பின்னணியிலான கதைகளம். கிராமத்தில் தொடங்கி சென்னை கானாவில் பயணிக்கும் ஒரு முழுமையான படமாக ஒரு இசையமைப்பாளருக்கு கிடைப்பது சந்தோஷமான விஷயம். தயாரிப்பாளர் எனக்கு என்ன வேண்டுமோ, அதை அளித்தார். இந்த படம் வித்தியாசமான படம், இதை தியேட்டரில் பார்க்க ஆவலாய் உள்ளேன். எனது கடைசி இரு படங்களும் ஓடிடியில் வெளியானது எனக்கு வருத்தம். இது தியேட்டரில் வரும், எல்லோரும் அனுபவிக்கும் படமாக இருக்கும். நன்றி.

பாடகர், நடிகர் கானா ஹரி கூறியதாவது,

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். இது தான் எனது முதல் படம். எனக்கு இந்த படம் தான் முதல் படம். நான் பள்ளி படிக்கும் போது கானா பாடிக்கொண்டிருப்பேன். எனது கானா பாடலை பார்த்த இயக்குனர் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். என்னை பாட வைத்தார், பின்னர் அந்த பாடலுக்கு நடிக்க கூறினார், பின்னர் படம் முழுக்க ஹீரோ உடன் வரும் பாத்திரத்தை கொடுத்தார். அதற்கு நன்றி. தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா ஒரு தம்பி போல் என்னை பார்த்துகொண்டார். இந்த படத்தில் பாடல் வரிகளை அற்புதமாக எழுதியுள்ளேன். பணத்தை தாண்டி உங்களது கைத்தட்டல் தான் தேவை, இந்த படத்தில் பெரும் உழைப்பை அளித்துள்ளோம். ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் இசக்கி பரத் கூறியதாவது..,

எல்லோருக்கும் வணக்கம். இந்த படத்தை இயக்குனர் பெரிதாக நம்பினார். இந்த படம் எல்லோருக்கும் ஒரு அட்ரஸாக இருக்கும். நான் கோலிசோடா படம் நடித்தேன், பின்னர் நாடோடிகள் 2 நடித்தேன், இரு படத்திற்கும் என் அம்மா என்னுடன் இருந்தார்கள். நான் பெரிய நடிகனாக வேண்டும் என என் அம்மா விரும்பினார். படத்தின் ஒரு கிளிப்பை இயக்குனர் காட்டினார், இதை அம்மா பார்க்க வேண்டும் என நான் விரும்பினேன். அம்மாவிற்கு கேன்சர் இருந்தது, அவர் இறந்துவிட்டார், அவர் என்னை ஆசிர்வாதம் செய்வார் என நான் நம்புகிறேன். கொடைக்கானல் படபிடிப்பின் போது தயாரிப்பாளர் தான் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். ரஜினிகாந்த் சார் போன்றவர்கள் நடித்த நிறுவனத்தில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் குறிஞ்சி என்ற கிராமத்தில் படபிடிப்பு நடத்தினோம், அது போன்று கிராமம் இருக்கா என பலர் கேட்டனர். நாங்கள் 8 கிமீ நடந்து ஒரு கிராமம் சென்று படபிடிப்பு நடத்தினோம், பலர் அவர்களது கடும் உழைப்பை இந்த படத்திற்கு அளித்துள்ளனர். இசையமைப்பாளர் சிறப்பான பாடலை கொடுத்துள்ளார். எனக்கு கோலிசோடா மூலம் அட்ரஸ் கொடுத்த விஜய் மில்டன் அவர்களுக்கு நான் நன்றியை இந்த நேரத்தில் கூறிகொள்கிறேன். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது….

இந்த மேடைக்கு நான் வர காரணமாய் இருந்த எனது தாய் தந்தைக்கு நன்றிகள். எனது இயக்குனர் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தார். எங்களுக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும் இயக்குனர் என்னை எங்கேயும் விட்டுகொடுக்கவில்லை. அதே போல் இந்த விழா நாயகன் கிரிஷ் நான் கேட்பதை செய்து கொடுத்தார். எங்களது குழுவின் அயராத உழைப்பினால் இந்த படம் இங்கு வந்துள்ளது.
தயாரிப்பாளர் ஆர் கே. சுரேஷ் சார் அன்று ஒரு கையெழுத்து போடவில்லை என்றால் இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது, அவருக்கு நன்றி. அதே போல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தயாரிப்பாளர் கே.ராஜன் சார் பெரிய உதவி புரிந்தார். எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை, எல்லோருக்கும் நன்றி.

இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது..,

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நமது நாட்டு பிரதமலிருந்து, முதலமைச்சர், வார்டு கவுன்சிலர் வரை நியூஸ் சேனலில் கிராமங்கள் கணினி மயமாகிறது என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே, அதை தாண்டிய இடங்கள் கிராமமாக இவர்களுக்கு தெரியவில்லை. கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமம் உள்ளது அந்த கிராமத்திற்கு, 2015-ல் தான் அட்ரஸ் கிடைத்தது. இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையில் 15,000 பேர் உள்ள ஒரு கிராமம் உள்ளது, அந்த கிராமம் சில வருடங்கள் முன்னரே இந்தியாவுடன் இணைந்தது, இதனை செய்திதாளில் நான் வாசித்தேன். ஒரு உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து இந்த படத்தில் கூறியுள்ளேன். நம் நாட்டில் பல கிராமங்கள் அப்படி உள்ளது. அப்படி ஒரு கிராமத்தில் 8 கிமீ நாங்கள் நடந்து சென்று படபிடிப்பு நடத்தினோம், நடிகர்களும் அவ்வளவு தூரம் நடந்து வந்து நடித்தனர். பெரிய நடிகர்களுக்கு மட்டும், கொடைக்கானல் அருகில் படபிடிப்பு நடத்தினோம். தயாரிப்பாளருக்கு நான் நன்றி கூற வேண்டும். எங்கு சென்றாலும் இந்த படத்தை பலர் வராது என்று கூறினர். கொரோனா காலத்தை படபிடிப்பு நடத்த முடியாமல் கஷ்டப்பட்டோம். என் மனைவி, குழந்தைகள், இசையமைப்பாளரும் தான் இந்த படம் வரும் என எனக்கு நம்பிக்கையளித்தனர். ஒரு கதை படமாக, அந்த கதை முடிவு செய்ய வேண்டும். எனது கதைக்கு உயிர் இருக்கிறது. அது தான் என்னை இங்கு கூட்டி வந்தது. ஒரு கட்டத்தில் நான் சினிமாவை விட்டு போய் விட்டேன், எனது குருநாதர் விஜய்மில்டன் தான் என்னை அழைத்து, கன்னட படத்தில் என்னை வேலை பார்க்க சொன்னார். அப்போது தான் சிவராஜ்குமாரிடம் என்னை அறிமுகம் செய்து இந்த படம் பற்றி அவரிடம் விஜய் மில்டன் சார் கூறினார். இந்த படம் உருவாக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் சரவணன் மற்றும் செந்தில் சார். விடியல் ராஜ் சார் என் மேல் அக்கறை வைத்திருந்தார். உதவி இயக்குனர்கள் சம்பளம் இல்லாமல் இந்த படத்தில் வேலை பார்த்தனர். ராஜன் சார் இந்த படத்திற்கு பெரும் உதவி செய்தார். ஆர் கே சுரேஷ் சார் இந்த படம் பற்றி தெரிந்து பெரிய உதவி செய்தார். நடிகர் இசக்கி பரத் நன்றாக நடிக்க கூடியவன், பெரும் உழைப்பை அளித்துள்ளான். படத்தின் ஹீரோயின் தமிழ் தெரியாமல் வந்து இப்போது தமிழ் கற்று உள்ளார். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணிக்கு சாருக்கு பெரிய நன்றிகள்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.

நட்புக்காக நடிகர் அதர்வாமுரளி காளி எனும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார். இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிறார்கள். இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.