தனது திருமண வதந்தியை தொடர்ந்து விளம்பரப்படுத்தி சுகம் காணும் காமெடி நடிகர்..!


சில நடிகர்கள் இருக்கிறார்கள்.. தங்களை பற்றிய சுகமான வதந்திகள் வந்தால் அதை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மற்றவர்களிடம் சொல்லி விளம்பரப்படுத்தி அதில் சுகம் காண்பார்கள்.. காமெடி நடிகர் சதீஷும் கூட அந்தவகையை சேர்ந்தவர் தான் என்பதை சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த வருடம் நடைபெற்ற ‘பைரவா’ பட பூஜையின் போது பட்டுவேட்டி சட்டை சகிதமாக அந்தப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகர் சதீசும், பட்டுச்சேலையில் கீர்த்தி சுரேஷும் வர இந்த மீடியாக்கள் தெரியாத்தனமாக இருவருக்கும் கல்யாணம் என்கிற ரீதியில் எழுதி தள்ளிவிட்டார்கள்..

இது கீர்த்திக்கு கசப்பாக இருந்திருக்குமோ என்னவோ,, ஆனால் சதீஷுக்கு தேன் குடித்த மாதிரி இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை… கொஞ்ச நாட்களாக அடக்கி வாசித்தவர், ‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் தானாகவே இந்தப்பேச்சை ஆரம்பித்தார்.

அதாவது ‘ரெமோ பட சக்சஸ் மீட்டில் கலந்துகொள்வதற்காக தானும் கீர்த்தி சுரேஷும் நேராக பைரவா செட்டில் இருந்து வருவதாகவும், ஏற்கனவே கல்யாண கிசுகிசு வந்தபோது, சதீஷின் அம்மா என்னடா எனக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா என கேட்டார்களாம். அப்படியெல்லாம் இல்லைம்மா என சொன்னதற்கு, ‘அப்பா ஆகலையா’ என வருத்தமாக கேட்டாராம் அவரது அம்மா.

இதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி பேசிய சதீஷ், இப்போதும் அதுபோல ஏதாவது எழுதி விடாதீர்கள் என கூறினார்.. அப்படியானால் எழுதுங்கள் என்றுதானே அர்த்தம். இது நடந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய சதீஷ் மீண்டும் அந்த கல்யாண வதந்திக்கு கொஞ்ச நேரம் உயிர் கொடுத்தார்.

சில நடிகைகளிடம் அவர்கள் பற்றிய கிசுகிசுக்களை அவர்களிடமே கேட்டறிந்தவர், எனக்கும் கூட அந்த நடிகையோட கல்யாணம் ஆகிருச்சுன்னு மூணு தடவை கிசு கிசு எழுதிட்டாங்க என வான்டட் ஆக விளம்பரம் தேடிக்கொண்டார் சதீஷ்..

எதையும் அலட்சியமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது.. நமக்குத்தான் கண் முன்னாடியே ராஜகுமாரன் – தேவயானி என்கிற உதாரணம் இருக்கிறதே…?