மலையாள நடிகர் மீது தொடர்ந்து பாசம் காட்டும் தனுஷ்..!


நடிகர் தனுஷுக்கு மற்ற பல ஹீரோக்களிடம் இல்லாத ஒரு குணம் இருக்கிறது. ஒருவரை தனக்கு பிடித்துப்போனால் அவர் பிற்காலத்தில் தனக்கு போட்டியாக வருவார் என்றெலாம் எண்ணாமல் அவர்களை வளர்த்து விடுவது தான் அந்த குணம். இதுவே சில நேரங்களில் அவருக்கு எதிராக திரும்பிய நிகழ்வுகளும் உண்டு.. தொலைக்காட்சியில் மட்டுமே தலைகாட்டி வந்த சிவகார்த்திகேயனை தனது ‘3’ படத்தில் அறிமுகப்படுத்தினார் அவரை வைத்து தொடர்ந்து படங்களும் தயாரித்து அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் தனுஷ்.

இப்போது தனுஷின் அன்பு பார்வை மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் பக்கம் திரும்பியுள்ளது.. முதன்முதலாக தான் மலையாளத்தில் தயாரித்துள்ள ‘தரங்கம்’ படத்தில் டொவினோ தாமஸை ஹீரோவாக ஒப்பந்தம் செய்த தனுஷ், அடுத்து இரண்டாவதாக தயாரிக்கும் ‘மரடோனா’ படத்திலும் அவரையே ஹீரோவாக்கி உள்ளார்.

இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள ‘மாரி-2’ படத்தில் வில்லனாகவே நடிக்க வைத்துள்ளார் தனுஷ். மலையாள நடிகர்கள் தமிழில் ஒரு இடத்தை பிடிக்க துடிக்கும் இந்த வேளையில், தமிழில் எளிதாக கால் பதிக்க வாய்ப்பாக கிடைத்துள்ள தனுஷின் அன்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டாராம் டொவினோ தாமஸ்.