“ரஜினியின் நல்ல மனதை வைத்து ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி” ; கொந்தளிக்கும் கலைப்புலி தாணு..!


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘கபாலி’ பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இந்த படம் நஷ்டம் என்று குரல் கொடுப்பவர் யார், அவருக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் கூறியுள்ளார்.

“இந்த பிரச்சனையை எழுப்பியுள்ள ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார்.

அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம், அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.

தற்போது காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு, தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும். இவ்வாறு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறினார்.