வீம்புக்காகவே இப்படி செய்கிறாரா விஷால்..?


சினிமா நடிகர்கள் எப்படா தப்பு பண்ணுவார்கள், பிடித்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிடலாம் என ஒரு கூட்டமே கண்கொத்தி பாம்பாக அவர்களது செயல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தநிலையில் விமர்சனமும் கண்டனமும் வருமென்றே தெரிந்து விஷால் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.

விஷால் தற்போது நடித்துவரும் படம் அயோக்யா. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இயக்குநராக அறிமுகமாகும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அயோக்யா படத்தின் படப்பிடிப்பு, தொடங்கியது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால்.

இதன் பர்ஸ்ட் லுக் நேற்று நவம்பர் 19 வெளியிடப்பட்டது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் படம் இடம் பெற்ற காட்சிக்கு விஜய்யின் தலையை போட்டு உருட்டினார்கள் அரசியல் கட்சிகள்.. ஒருபக்கம் கண்டனங்களும் இன்னொரு பக்கம். தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்களும் கூட நடந்தன.

இப்போது அயோக்யாவில் பீர் பாட்டில் வைத்துக்கொண்டு, அதிலும் போலீஸ் ஜீப்பில் அமர்ந்துகொண்டு இப்படி செய்திருப்பதற்கு கண்டனங்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. ஆமாம்.. தெரிந்தே வீம்புக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விஷால்..?