மக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’..!

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். அதோடு படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம்.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ள பெண்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் ஏரியாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அந்த ஏரியாவில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்தப்பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள்.

அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்தப்பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில், சண்டைக்காட்சிகளுக்காக பெரிய அளவில் பொருட்செலவு செய்வார்கள். அதே அளவுக்கு பெரிய பொருட்செலவில் இப்படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இடம் பெறுகிறது. அதில், இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது. “ஸ்டன் சிவா” மாஸ்டர் மிக பிரமாண்டமாக இந்த சண்டைக்காட்சிகளை அமைத்து தந்திருக்கிறார். அதைப்போல வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்சா நான்கு பேருமே சண்டைக் காட்சிகளில் அசத்தி இருக்கிறார்கள். இதற்காக கலை இயக்குனர் பத்மநாபன் பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்து தந்திருக்கிறார். நிச்சயமாக இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். என்கிறார், இயக்குநர் சுந்தர்பாலு.