சினிமாவிற்கு முன்னோடிகளான கூத்துக் கலைஞர்கள் பற்றிய படம் “சும்மாவே ஆடுவோம்”!

‘திருட்டு வி.சி.டி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’. முழுக்க முழுக்க காமெடிப் படமான உருவாகியுள்ள இப்படத்தில் கூத்து கலைஞர்கள் பற்றியும், தற்போதைய சினிமாவில் கூத்து கலையின் பாதிப்பு குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக அறிமுகமாகிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரரான அருண் பாலாஜி, குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களுடன், 45 முன்னணி காமெடி நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை முருகன் மந்திரம், அஸ்மின் ஆகியோர் எழுதியுள்ளார்கள். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சதிஷ் பி.கோட்டாய் படத்தொகுப்பு செய்துள்ளார். மதூர் எஸ்.சிவா கலையை நிர்மாணிக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பாலகுமாரன், ரேவதி, தினா, ஜாய் மதி ஆகியோர் நடனம் அமைத்துள்ளார்கள். சார்லஸ் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

படம் குறித்து, இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ’காதல்’ சுகுமார் கூறுகையில், “கூத்து கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நலிவடைந்த கூத்து கலைஞர்களைப் பற்றிய கதை என்பதால், இதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் முழுக்கமுழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம்.

கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக ஒரு கிராமத்தை இலவசமாக கொடுக்கிறார். அதன்படி கூத்து கலைஞர்கள் வாழும் அந்த கிராமத்திற்கு ‘கூத்துப்பேட்டை’ என்ற பெயர் வருகிறது. கூத்து தொழிலை விட்டால் வேறு ஏதும் தெரியாத அந்த மக்கள், நவீனகால வளர்ச்சிக்கு போட்டி போட முடியாமல் தடுமாறும் நேரத்தில், ஜமீன் அவர்களுக்கு இலவசமாக கொடுத்த அந்த கிராமத்திற்கு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பதைத் தான் காமெடியாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.

மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இனிமையான பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களைக் கவர்ந்துள்ளது. ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.