நிபுணன் – விமர்சனம்


கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம்வரும் அர்ஜுனின் 150வது படம் என்கிற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது ‘நிபுணன்’. அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தான் இந்தப்பதத்தை இயக்கியுள்ளார்.

நகரத்தில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன.. கொலைகள் பண்ணுபவன் ஒரு ஒரு சைக்கோ சீரியல் கில்லர்.. ஒவ்வொரு கொலை நடந்தபின்னபின்னும் அடுத்த கொலைக்கான க்ளூவையும் விட்டு செல்கிறான் அர்ஜூன் தலைமையில் இயங்கும் என்கவுண்டர் டீமின் வலதுகை வரலட்சுமி.. இடதுகை பிரசன்னா. கொலைகாரன்.. இவர்களிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.

வரிசையாக நடக்கும் இரண்டு கொலைகளை வைத்து மூன்றாவதாக யாரை கொல்லப்போகிறான் என யூகிக்கும் அர்ஜூன் அதை தடுக்க நினைக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.. அவனின் மொத்த டார்கெட் நான்குபேர் என்பதும் அதில் நான்காவது ஆள் தான் தான் என்பதும் அவன் கொலை செய்வதற்கு காரணமாக தான் ஏற்கனவே ஈடுபட்ட வழக்கு ஒன்றுதான் காரணம் என்பதும் அர்ஜுனுக்கு தெரிய வருகிறது.

இறுதியில் வரலட்சுமி, பிரசன்னா இருவரையும் மடக்கி, தூக்கு கயிற்றில் மாட்டி, அவர்களை பணயமாக வைத்து அர்ஜுனையும் தனது இடம் நோக்கி வரவழைக்கிறான். காப்பாற்ற வந்த இடத்தில் அர்ஜுனின் உடல் பாதிப்பு அவரை செயல்பட விடாமல் தடுக்கிறது. முடிவு என்ன ஆனது..? சீரியல் கில்லர் யார்..? என்பது க்ளைமாக்ஸ்.

இப்போதும் கூட தான் இன்னும் அதே ஆக்சன் கிங் தான் என்பதை நிரூபிக்கிறார் அர்ஜூன். வழக்கமாக போலீஸ் யூனிபார்ம் அணிந்து அதிரடி காட்டும் அர்ஜூன் இதில் ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து அதே அதிரடியை தொடர்கிறார்.. குறிப்பாக கொலைகாரனுடன் அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது. இன்னும் இரண்டு சண்டைக்காட்சிகளை சேர்த்திருக்கலாமே பாஸ்..

பிரசன்னா, வரலட்சுமி இருவருக்குமே என்கவுண்டர் அதிகாரிகளாக கொடுக்கப்பட்ட பணி புதிது.. அதில் கூடுமானவரை தங்களை திறம்பட பொருத்திக்கொண்டு இருக்கிறார்கள்.. வரலட்சுமி வழக்கம்போல படபட பட்டாசாக பொரிந்து தள்ளுகிறார். காதல் கீதல் என இல்லாமல் கலகலப்பான பிரண்ட்ஷிப்புடன் வரலட்சுமி-பிரசன்னா எபிசோடை ஜாலியாக நகர்த்தியிருக்கிறார்கள்.

அர்ஜுனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரனுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கூட கவனம் ஈர்க்கவே செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சுமனும் சுஹாசினியும் காட்டியிருக்கும் முகங்கள் புதிது. அவர்களது எபிசோட் மூலமாக வடமாநில மாணவி ஒருவரின் மர்ம மரணம் ஓனரை காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..

வைபவ் கேரக்டருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் படத்தில் சஸ்பென்ஸ் ஏரியாவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது ஆறுதல். க்ளைமாக்ஸில் மட்டுமே திரையில் வந்தாலும், அந்த முகத்தில் காட்டும் வன்மமும் கொடூரமும் என சீரியல் கில்லராகவே மாறிவிட்ட அந்த நபர் (நமக்கு நன்கு தெரிந்த ஒரு ஹீரோ தான்) யாரென்பது தியேட்டரில் பார்க்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்..

சீரியல் கொலைகள் என்பது யாரோ சிலரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்ப்பதற்காக செய்வது தான். இந்தப்படத்திலும் அதே காரணம் தான் என்றாலும் கூட, கொலை வழக்கை அர்ஜூன் கையாளும் விதம் கொஞ்சம் டெக்னாலஜி ரீதியாக புதிது தான். ஆனால் படம் முழுதும் வந்தாலும் கூட வில்லன் கதாபாத்திரம் தன்னை க்ளைமாக்ஸில் தான் வெளிப்படுத்துவதால், இடையில் ஆக்சன் காட்சிகளுக்கான வேலை குறைவாக போய்விடுகிறது வருத்தம் தான்.

படத்தின் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையக்கூடாது என இயக்குனர் அருண் வைத்தியநாதன் மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.. ஒரு விறுவிறுப்பான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கான பல அம்சங்கள் இந்தப்படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், நவீனின் இசையும் த்ரில்லருக்கான மூடை எந்நேரமும் தக்கவைக்கின்றன.

அர்ஜூன் – அவர் மனைவி சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம். கொலைகாரன் க்ளூ கொடுத்து சவால் விடுவதுடன் நின்று விடாமல், அவனுக்கு அர்ஜுனுக்குமான நேரை சேசிங் காட்சிகளை இணைத்திருந்தால் இன்னும் விரிவிருப்பு கொட்டியிருக்கும்..

இருந்தாலும் தியேட்டருக்கு வரும் ரசிகனை உற்சாகம் குறையாமல் தான் வெளியே அனுப்பி வைக்கிறார் இந்த நிபுணன்.