கும்பகோணம் குழந்தைகள் நிதி என்னாச்சு…? சைலன்ட் மோடில் சரத்குமார்..!

நடிகர்சங்க கடன் பாக்கி ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர்சங்க வைப்பு நிதி கிட்டத்தட்ட மூன்றுகோடி ரூபாய் இருப்பதாக நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது சரத்குமார் சொல்லிவந்தார்.. தேர்தல் முடிந்து புதிய அணி பொறுப்பேற்று கணக்குகளை சரிபார்த்தபோதுதான் வைப்பு நிதி ஒரு கோடி ரூபாய்க்கும் கீழாக இருப்பது தெரிய வந்துள்ளது..

இதுபோக இன்னொரு பூகம்பம் ஒன்றும் கிளம்பியுள்ளது. அது பதினொரு வருடங்களுக்கு முன் கும்பகோணம் பள்ளி விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்காக அப்போது ரஜினி, சூர்யா, விஜய் உட்பட திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலரும் சேர்ந்து அளித்த நிதி.. கிட்டத்தட்ட அதுவே 6௦ லட்ச ரூபாய் வரும்..

அந்த சமயத்தில் விஜயகாந்த் மட்டும் தனது பத்து லட்ச ரூபாய் நிதியை தானே நேரில் கொண்டுபோய் அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டு வந்தார். மற்றவர்கள் கொடுத்த பணம் சரத்குமார் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து அப்படி ஏதும் நடிகர் சங்கம் மூலமாக தங்களுக்கு உதவிகள் வந்து சேரவில்லை என தகவல் வந்துள்ளது. அப்படியானால் அந்த பணம் முழுவதும் எங்கே போனது என்கிற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே நடிகர் சங்க கட்டடம் ஒப்பந்தம் ரத்து என்று சொன்னதும் டுபாக்கூர் ஆகிவிட்டது..

இப்படி ஒவ்வொரு விவகாரமாக வெளிக்கிளம்பி வந்துகொண்டு இருக்கையில் சரத்குமாரோ குடும்பத்துடன் வெளிநாடு டூர் கிளம்பி போய்விட்டாராம்.. தேர்தலில் நடந்த சச்சரவு, மன உளைச்சல்களில் இருந்து ரிலாக்ஸாவதற்குத்தான் அவர் வெளிநாடு போனதாக சொல்லப்பட்டாலும், இப்படி புதிது புதிதாக விவாகரங்கள் கிளம்பும் என தெரிந்துதான் வெளிநாடு கிளம்பி போனதாகவும் சொல்லப்படுகிறது.. நாட்டாமை ஊர் திரும்பினால் தான் சத்தியம் தெரியவரும்..