‘குஷி’யாக வளர்ந்து வரும் நடிகர் ; பிரகாசம் மங்கிய கவலையில் இன்னொரு நடிகர்..!


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய ‘வாலி’, ‘குஷி’ என்ற இரண்டு படங்கள் ஹிட்டானது. அதன் பின் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. ஆகையால் தன்னைத்தானே இயக்கிக்கொண்டு தன் படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா.

ஒருகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விட தற்போது படம் இயக்குனர் தொழிலை ஓரங்கட்டிவைத்து விட்டு, முழுநேர நடிகராக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

கதையின் நாயகனாக மட்டும் அல்லாமல், குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடிக்க களமிறங்கிவிட்டார். தற்போது விஜய்யின் ‘மெர்சல்’, மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது அவரது வில்லன் மார்க்கெட் ஏறிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கேரக்டரில் இதற்கு முன் நிலையான இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.. ஆனால் பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் இறங்கியதை அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அந்த இடத்தை எஸ்.ஜே.சூர்யாதான் பிடிப்பார் என்கிறார்கள். இதனால் பிரகாஷ்ராஜ் கொஞ்சம் கவலையில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.