தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்

 

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் ‘கங்காரு’ படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை என் ஞானத்தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை.2015ல். ‘கங்காரு’ வை வெளியிடுகிறார். “என்றார்.

ஊருக்குச் சென்று என் அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு !

இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது “இங்கே மூன்று பாடல்கள் போட்டுக் காட்டினார்கள். இதிலேயே மொத்தக் கதையும் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்று என் அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு ஏற்படுத்தியது. . வீடு சம்பந்தப்பட்ட கதை,உறவு,சம்பந்தப்பட்ட கதை. நிச்சயம் இது வெற்றிபெறும். ‘மிருகம்’ சாமி இனி ‘கங்காரு’ சாமியாகிவிடுவார். .”என்றார்.

இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன!

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் பேசும்போது “கதை பிடித்து இசையமைத்தேன். முதலில் தாலாட்டு பாடலை உருவாக்கினோம். அப்படியே வளர்ந்தது பாடல்கள். இப்படத்தில் அர்த்தமில்லாத பரபரப்பு ,ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்காது.உண்மையாக இருக்கும். உணர்வு பூர்வமாக இருக்கும்.முன்பெல்லாம் நான் பாடிவிட்டுச் சென்று விடுவேன். நான் இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன. ”

ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப் படுத்த வேண்டும்!

வி.சேகர் பேசும்போது “நிச்சயம் இது நல்ல படமாகத் தெரிகிறது. நம்பிக்கை அளிக்கிறது. இப்போதைய படங்களைப் பார்க்கும் போது டெக்னிக்கலாக வளர்ந்திருப்பது தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து எவ்வளவோ டெக்னிக்கலாகப் பெறலாம். ஆனால் திரைக்கதை, கருத்து கலாச்சாரம் நமதாக இருக்க வேண்டும். பண்பாட்டை நம்மிடமிருந்துதான் எடுத்துக்கொள்ளவேண்டும் குழந்தைக்கு சட்டை வெளிநாட்டில் எடுக்கலாம். ஆனால் குழந்தை நமதாக இருக்க வேண்டும். சட்டை பாரின்ல எடுக்கலாம் குழந்தையே பாரின்ல வாங்க முடியுமா? சினிமாவும் அப்படித்தான்.சினிமாவில் இப்போது நிறைய பாரின் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறேன்..

போக்குவரத்தில் சிறிய பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் போனால் வாகன நெரிசலில் டிராபிக் ஜாம்தான் ஏற்படும். அதை கட்டுப்படுத்த டிராபிக் சிக்னல், டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப் படுத்த தயாரிப்பளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
என்றார்.

‘கங்காரு’ க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும் !
கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , “பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் ‘பாசமலர்’ ,’முள்ளும்மலரும்’ வரிசையில் நான் தயாரித்த ‘கிழக்குச் சீமையிலே’ படமும் அமைந்ததில் பெருமைப் படுகிறேன். அது 275 நாள் ஓடியது. ‘கங்காரு’ படத்தை முழுதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர் பார்க்க முடியாத ‘கங்காரு’ க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும் படமும் வெற்றி பெறும் “என்றார்.

தயாரிப்பாளருக்கு லாபம் வரும் வழியை அமையுங்கள் !
ஆர்.கே.செல்வமணி பேசுகையில் ” கங்காரு தன் குட்டியைச் வயிற்றில் சுமப்பது போல பாசமுள்ள தங்கையை சுமக்கும் அண்ணனின் கதை.. என்று ஒரே வரியில் சாமி கதை சொன்னார். படம் எடுக்கும் போது பல பிரச்சினைகளை சந்தித்தது.தயாரிப்பாளர், இயக்குநர் இருவரும் விடாக் கண்டன் கொடாக்கண்டன்கள் போராடி ஒரு வழியாக படத்தை முடித்து உள்ளார்கள்.

அண்மையில் 5 படங்கள் வெளியாகி யுள்ளன. அதில் 3 படம் நல்ல படம். எந்தப்படம் பார்ப்பது என்று மக்கள் குழம்புகிறார்கள். இதை முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளருக்கு லாபம் வரும் வழியை அமையுங்கள் “என்றார்.