எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக பேசிய ராதிகாவின் ஆணவ பேச்சு..!

ராதிகாவுக்கு எப்போதுமே தான் கருத்தாக பேசுவதாகவே ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.. அதுமட்டும் இல்லாமல் சீரியலில் அவர் அதிகார தோரணையில் வசனம் பேசிப்பேசி வெளியில் நிகழ்ச்சிகளில் பேசும்போதும் அதையே பிரதிபலிக்க முயற்சி செய்வார். அது அதுதான் தன்னை இப்படி சிக்கலில் மாட்டிவிடும் என அவர் கனவில் நினைத்திருக்கவும் மாட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சிம்புவும் இவரும் சேர்ந்து பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து எதிரணியினரை குறிப்பாக விஷாலை தாக்கு தாக்கென்று தாக்கினார்கள். நடிகர்சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்படி செய்ததே அவர்களுக்கு மைனஸ் தான். அதில் விஷாலை வேறு ரெட்டி என பேசி சாதிப்பிரச்சனையில் தேவையில்லாமல் கைவைத்தார் ராதிகா.

இதையெல்லாம் விட அவர் பேசும்போது, “எம்.ஜி.ஆர் கட்டிய நடிகர் சங்க கட்டத்தை மீட்கவேண்டும் என விஷால் சொல்கிறார்.. வரலாறு தெரியாமல் விஷால் பேசுகிறார்.. நடிகர்சங்க கட்டடத்தை கட்டியது எம்.ஜி.ஆர் அல்ல. சிவாஜி” என தான் ஏதோ பெரிய மேதாவி போலவும் விஷால் பேச்சில் பிழை கண்டுபிடித்துவிட்டது போலவும் இறுமாப்புடன் பேசினார்.

ஆனால் அந்தக்காலத்தில் நடிகர்சங்க கட்டடம் கட்டப்பட்டது சிவாஜி நடிகர்சங்க தலைவராக இருந்தபோதுதான் என்றாலும், அங்கே எம்.ஜி.ஆரின் பங்களிப்பு இல்லாமல் அது எப்படி நடந்திருக்க முடியும்.. ஆக இவர்கள் இருவருக்குமே அதில் உரிமை உண்டு என ராதிகா பேசாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் தேவையில்லாமல் புரட்சித்தலைவரை அவமானப்படுத்துவது போல வார்த்தையை விட்டது, முதல்வர் அம்மாவின் பார்வைக்கு வீடியோவாகவே சென்றுவிட்டதாம். அதைபார்த்து கோபமான அம்மா, ஆச்சி மனோரமாவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது சரத்குமாரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனது அதனால் தானாம். ஏற்கனவே தேர்தலில் பின்னடைவை சந்தித்துவரும் சரத்குமார் அணிக்கு இது பெருத்த அடி தான் என்றும் சொல்லப்படுகிறது.