மர்மநபர்கள் புரடக்சன் மேனேஜரை மிரட்டுவதை கைகட்டி வேடிக்கை பார்த்த அருண்விஜய்…!

என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து அருண்விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘குற்றம் 23’.. என்னை அறிந்தால் படத்தின் விக்டர் கதாபாத்திரம் அருண்விஜய் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் இந்தப்படத்தை சரியான நேரத்தில் வெளியிடுவதற்காக நிதானம் காட்டி வந்தார் அருண்விஜய்.. அதன்படி இந்தப்படம் மார்ச்-3ல் ரிலீஸாகிறது.

இந்தப்படத்தில் வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளருக்கான பொறுப்பையும் சுமந்துள்ளார் அருண்விஜய்.. காரணம் படத்தை தயாரிக்கும் இந்தர் குமார் அவரது மச்சான். பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு பெரும்பாலும் அவர் பெங்களூரிலேயே தங்கிவிட அருண்விஜய் தான் தயாரிப்பு வேலைகளையும் கூடுதலாக கவனிக்க வேண்டி இருந்ததாம்.

ஒரு நாள் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய கட்டடத்தின் அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் சண்டைக்காட்சி படமாக்கப்பட எல்லாம் தயார் நிலையில் இருந்ததாம். அருண்விஜய் படப்பிடிப்புக்க தயாராகி கொண்டிருக்க, யாரோ சில நபர்கள் இங்கே எங்கள் அனுமதியில்லாமல் ஷூட்டிங் நடத்த முடியாது, உடனடியாக நிறுத்துங்கள் என்றுகூறி கலாட்டா பண்ணுவதாக அவர் காதுகளுக்கு செய்தி வந்தது..

மேலே வந்து பார்த்தபோது புரடக்சன் மேனேஜரை சிலர் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டிக்கொண்டு இருந்தார்களாம்.. அவர்கள் பேசுவதை முதலில் ஓரமாக கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாராம் அருண்விஜய்.. அதன்பின் சில நிமிடங்களில் அவர்களிடம் சென்று சமரசம் பேசியவர் ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தியும் விட்டார்..

‘முறையாக அனைத்து அனுமதிகளும் பெற்றுத்தான் அங்கே ஷூட்டிங் நடத்தினோம்.. ஆனால் சிலர் பணத்தை குறியாக வைத்து எங்களை மிரட்டினார்கள்.. நானும் பதிலுக்கு ஆவேசமாக சீரியிருந்தால் அன்றைய ஷூட்டிங் ஏற்பாட்டுக்கு செலவு செய்திருந்த பதினைந்து லட்ச ரூபாய் தொகையும் வீணாக போயிருந்திருக்கும்.. ஆனாலும் சமயோசிதமாக சமாளித்தேன்” என்று கூறியுள்ளார் அருண்விஜய்.