கிருஷ்ணய்யர் மறைவு… சீமான் இரங்கல்

மனிதநேயப் போராளி கிருஷ்ணய்யரின் இலட்சிய வழி நடப்போம்!
செந்தமிழன் சீமான் இரங்கல்

முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது…

முன்னாள் நீதிபதி அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் மனிதநேயப் போராளியாக வாழ்ந்தவர். மரண தண்டனைக்கு எதிராக தனது இறுதிக்காலம் வரை போராடிய சட்டப் போராளி. தம்பிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு பிரச்னையில் மாந்தநேயக் குரலாக நம்மோடு இணைந்து நின்ற பெருமகன். அய்யா அவர்களின் மறைவு சக மனிதரை நேசிக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்குமான பேரிழப்பு.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் மனிதநேய மாந்தராக அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் ஆற்றிய பணி காலத்துக்கும் நினைவுகூறத்தக்கது. விசாரணைக் கைதிகளுக்கு பிணை வழங்குவதுதான் நியாயம் என்றும், அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே உண்மையான நீதியாக இருக்கும் என்றும் அய்யா கிருஷ்ணய்யர் சொன்ன வார்த்தைகள்தான் மனித உரிமைகளை இன்றைக்கும் கட்டிக் காத்து வைத்திருக்கிறது.

முன்னெச்சரிக்கை என்கிற பெயரில் அத்துமீறி நடத்தப்படும் கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், கைதிகளுக்கான நியாயமான உரிமைகளை வலியுறுத்தியும் அய்யா கிருஷ்ணய்யர் உரைத்த தீர்ப்புகள் காலக் கல்வெட்டில் எக்காலமும் நிலைத்திருக்கும்.

‘மரண தண்டனை ஒழியட்டும்; மலர்ந்தெழட்டும் மனிதநேயம்’ என்பதையே இறுதிவரை மறையாத இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த மனிதநேய மகத்துவரின் வழி நடப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

அய்யா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதேநேரம், அவருடைய இலட்சிய வழி நடக்கும் உள உறுதியை காலத்துக்கும் நெஞ்சில் சுமப்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.