எலக்சன் ; விமர்சனம்


அரசியல் பின்னணியில் வெகு குறைவான படங்களே வெளியாகிவரும் நிலையில் எலக்சன் என்கிற பெயரிலேயே வெளியாகி இருக்கும் படம் இது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தல்களை வைத்து பின்னப்பட்ட கதை இது. அதற்கான தீனி உள்ளே இருக்கிறதா ? பார்க்கலாம்.

மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியன், இளம் வயது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது மகன் நாயகன் விஜய்குமாருக்கு அரசியல் மீது நாட்டம் இல்லை என்றாலும் தனது உறவினரின் தூண்டுதலால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார். அப்பாவின் பேச்சையும் மீறி விஜய்குமார் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க, அதன் மூலம் அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து விஜய்குமார் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, இல்லையா? என்பது தான் ‘எலக்சன்’.

அரசியல் கதிக்கதளம் என்றாலும் தனது கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் விஜய்குமார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் பக்கத்துவீட்டுப் பையனை கண்முன் நிறுத்துகிறார்

நாயகி ப்ரீத்தி அஸ்ராணிக்கு அழுத்தமான கேரக்டர் என்பதும் தன்னால் முடிந்தவரை அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமாரின் அப்பாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், அம்மா நாச்சியாள் சுகந்தி அபாரமாக நடித்துள்ளார். பட்டியலின மக்கள் தலைவர் டேவிட் ஆக நடித்திருப்பவர், திருநங்கையாக வருபவர் எனத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும், அந்த தேர்தல் பாடல் தனி ரகம். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, இதுவரை பார்க்காத லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார்.

தமிழில் அடர்த்தியான அரசியல் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிது. அதிலும் இந்த ‘எலக்சன்’ திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் உள்ளாட்சி தேர்தல் விடயம் தமிழ் திரையுலகத்திற்கு புதிது. சாதி சார்ந்த ஒரு அரசியலாகத்தான் உள்ளாட்சி அரசியல் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு துரோக அரசியலை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமிழ். படத்தின் உச்சகட்ட காட்சி மக்களுக்கு தேர்தல் அரசியல் குறித்தும், தேர்தல் எவ்வளவு அவசியமானது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருப்பதற்காகவே இயக்குனரை தாரளமாக பாராட்டலாம்.