இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி – நடிகர் கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது நேற்று இரவு எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கும் மருத்துவமனைக்கே சென்று கமல் மற்றும் இயக்குனர் சங்கர் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது

“இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.

நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்கு தான் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்”.

இவ்வாறு கமல் கூறினார்.