சந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு முக்கியமான பாத்திரத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில் இன்னும் இந்த படத்திற்கான கதாநாயகி முடிவாகவில்லை

இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அதாவது கதாநாயகியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் படத்துறையில் அடிபடுகிறது. சமீபத்தில் நடந்த ஆடியோ வெளீயிட்டு விழாவில் பேசிய ரஜினி, இனி என் மகள் வயதுடைய கதாநாயகிகளுடன் நடிக்க விருப்பம் இல்லை என்று பேசியிருந்தார். எனவே ரஜினியின் வயதுக்கும் அவர் ஏற்கும் கேரக்டருக்கும் பொருத்தமான ஹீரோயினை தேர்வு செய்ய கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த சிம்ரன், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இதுவரை அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததில்லை.

அப்படி ஒரு வாய்ப்பு கடந்த 2004லிலேயே சந்திரமுகி படம் மூலமாக சிம்ரனை தேடிவந்தது.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் சிம்ரனால் நடிக்க முடியாமல் போக, அதன்பின்னர் அந்த கேரக்டரில் நயன்தாரா ஒப்பந்தமானார்.. அந்தப்படத்தில் கிடைத்த புகழ் மூலம் இன்றுவரை நம்பர் ஒன் நாயகியாக அசைக்க முடியாத இடத்தையும் பெற்றார். அதனால் ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என சிம்ரனுக்கு இருந்த மனக்குறை கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதன் மூலம் தீரப்போகிறது என்றே சொல்லலாம்.