ஒரே இரவில் நடக்கும் கதை ‘எக்ஸிட் ‘( EXIT)

‘பசங்க’ திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து :கோலி சோடா’ வில் பேசப்பட்டு ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து அங்கீகாரம் பெற்றவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘எக்ஸிட்’ இது
ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.

இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி .உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார்.ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

கதாநாயகன் ஸ்ரீராம் எப்போதும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நடிப்பாற்றலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அவரையே நாயகனாக நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த விஷாக் நாயர் இதில் ஒரு மிருகமாகவே மாறி நடித்துள்ளார் .

‘ஜெயிலர்’ படத்தில் வரும் விநாயகன் போல,பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு
மிருக குணத்தை மட்டும் தான் காட்டுவார்கள்.இப்படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மாறி,ஒரு மிருகத்தைப் போல நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார். ஆனால் உணர்ச்சிகள் காட்டுவார்.மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.

இவர்கள் தவிர ,ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி,வைஷாக் விஜயன்,ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்குத் திரைக்கதை – அனீஷ் ஜனார்தன் – ஷாஹீன்,கதை – அனீஷ் ஜனார்தன்,
ஒளிப்பதிவு – ரியாஸ் நிஜாமுதீன் ,
படத்தொகுப்பு – நிஷாத் யூசுப், இசை – தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன்,
ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி,கலை – எம். கோயா,
ஆடை வடிவமைப்பு – சரண்யா ஜீபு என சினிமாவின் மீது தாகம் கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளது.

தமிழில் திரில்லர் படங்கள் ஏராளம் வந்தாலும் அவற்றில் சில படங்கள் ஜாலி, கேலி என்று தடம் மாறிச் சிரிக்க வைப்பது உண்டு.

ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும்.அந்த திகில் மனநிலையைக் கடைசி வரை மாற்றாமல் இருக்கும்.

இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகிறது. அதே மாதம் ஒன்பதாம் தேதி மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ வருகிறது .அதற்குப் போட்டியாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.அதிலிருந்து இந்தப் படத்தின் மீது படக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கை புலப்படும்.