“சண்டிக்குதிரை” படத்திற்காக நாற்பது நட்சத்திரங்கள் நடித்த விளம்பர பாடல்!

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.

மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வீரா. பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் – வாரஸ்ரீ.. இவர் பக்தி பாடல்கள் எழுதுவதில் வல்லவர். இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருகிறார்கள். “ நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா “என்ற பாடலும் அடக்கம். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.

கலை – கே.எஸ்.புவனா / நடனம் – தினா, சதீஷ் / ஸ்டன்ட் – டென்ச் ரமேஷ்

எடிட்டிங் – ஜூட் தேடன்ஸ் / இணை இயக்கம் – அருள்

தயாரிப்பு நிர்வாகம் – என்.எ.நாதன் / இணை தயாரிப்பு – பி.பிரகாசம்

தயாரிப்பு – சன்மூன் கம்பெனி

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவரிடம் கேட்டோம்…

படம் காமெடி, காதல் , திரில்லர் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறோம். செல்பி மோகத்தால் ஏற்படும் விபரீதம் தான் இந்த படத்தின் முக்கிய கரு. இந்த படத்தின் இன்னொரு ஹீரோவே படத்தின் திரைக்கதை தான். படம் முடியும் வரை யாருமே யூகிக்க முடியாத அளவிற்கு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கும்.

இந்த படத்தில் கஞ்சா கருப்பு , ரிஷா பங்குபெற்ற ஒரு வித்தியாசமான பாடல் காட்சி புதுக்கோட்டை அருகில் உள்ள குலமங்கலம் என்ற கிராமத்தில் திருவிழா நடைபெறுவது போன்ற செட் அமைத்து படமாக்கினோம். அந்த பாடலில் அந்த கிராம மக்கள் எல்லோரும் பங்குபெற்றனர் நாங்கள் நடத்திய திருவிழா கூட இப்படி பிரமாண்டமாக இருந்ததில்லை என்று பாராட்டினர் . தவிர இந்த படத்திற்கான விளம்பரப் பாடலான “ அச்சச்சோ ஆச வச்சேன் “ என்று தொடங்கும் பாடலில் நாற்பது நட்சத்திரங்களுக்கு மேல் நடித்துள்ளனர். அந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.