சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து !


சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு பொன்விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு “ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி” விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு, இது மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்குத் தூணாகவும், இளைஞர்களுக்கு எழுச்சியாகவும், உயர்வுக்கு ஊன்றுகோலாகவும், வானுயர பெயரோங்கி வாழும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் சிறப்பு விருது பெறப் போவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமைக் கொள்கிறது. விருது பெறபோகும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், அப்பெருமையை வழங்கிட்ட மத்திய அரசுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.