பேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..!


தரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. மெகாஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் ‘தங்க மீன்கள்’ சாதனா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், ’பெர்லீன்’ மற்றும் ’வெனீஸ்’உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பல பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்தநிலையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ’பேரன்பு’ பட டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கேரளாவில் இருந்து மம்முட்டியும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த விழாவில் இயக்குனர் ராமுக்கு உறுதுணையாக நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என காட்டும் விதமாக இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், கரு.பழனியப்பன், ஏ.எல்.விஜய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல இயக்குனர்கள் மேடையை அலங்கரித்து ஆச்சரியப்படுத்தினர்.

இந்த விழாவில் பேசிய சித்தார்த், “தயவுசெய்து இயக்குனர்கள் எல்லாம் இப்படி நல்ல படம் கொடுக்குற வேலையை மட்டும் பாருங்க.. நடிக்க வந்து சாகடிக்காதீங்க” என பேசினார். அதாவது திறமையான இயக்குனர்கள் நடிப்பு என்கிற பெயரில் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் புதிய நல்ல படைப்புகளை மட்டும் உருவாக்கவேண்டும் என்கிற ரத்தத்தில் தான் அவர் அப்படி கூறினார்.\

ஆனால் அடுத்து பேசவந்த இயக்குனர் கரு.பழனியப்பனோ, “மம்முட்டி மாதிரி நடிகர்கள் எங்களுக்கு கிடைக்காததால் தானே நாங்கள் எல்லாம் நடிகர்களாக மாறவேண்டி இருக்கு” சித்தார்த் போன்றவர்களின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என என பதிலுக்கு சித்தார்த்தின் காலை வாரினார்.

இதுதான் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறது என்பதோ..?