வாட்ச்மேன் வேலைக்கு தயாராகும் அறம் பட இயக்குனர்..!.


சமீபத்தில் நயன்தாராவின் துணிச்சலான நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் அறம். இந்த பாராட்டுதலுக்கு ஒட்டு மொத்த சொந்தக்காரர் இயக்குநர் கோபி நயினார் தான். படம் பாராட்டுகளை பெற்றாலும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

இது பற்றி பேசிய கோபி நயினார், “நிறைய ஐஏஎஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசியல் தலைவர்கள் அறம் படத்தை பாராட்டினார்கள். இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை. நள்ளிரவில் போன் செய்து என் குடும்ப பெண்களை எல்லாம் இழுத்து தவறான வார்த்தைகளை சொல்லி திட்டுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக அமர்ந்து விவாதம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அப்படி இல்லாமல் சமூக வலைதளங்களில் என்னை சாடுகிறார்கள். தொடர்ந்து நான் நம்முடைய பிரச்னைகளுக்கான விஷயங்களை தான் படமாக்க போகிறேன். ஒருவேளை எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்காவிட்டால் வாட்ச்மேன் வேலைக்கு கூட போவேனே தவிர மசாலா கதைகளுக்கும் நான் செல்லமாட்டேன். என விரக்தியுடன் கூறியுள்ளார் கோபி நயினார்.