குத்துப்பாட்டு வேணுமாம் ; சிம்பு-டி.ஆரின் அடாவடியை புட்டுப்புட்டு வைத்த பாண்டிராஜ்..!

‘வாலு’ படத்தின் தாமதத்திற்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி காரணமாக இருந்தார்கள் என கண்ணீர் மல்க சொல்லி, சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் அதில் ஆதாயமும் அனுதாபமும் தேட முயற்சித்தார்களே தவிர, தங்களால் படத்திற்கு என்னவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதை கமுக்கமாக மறைத்து விட்டார்கள்.

இப்போது அடுத்ததாக ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு நயன்தாரா கால்ஷீட் கொடுத்து மீதிப்படத்தை முடிக்க மறுக்கிறார் என நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்கள் அப்பாவும் மகனும்.. இதை கேள்விப்படும் எல்லோரும் இப்பதானே வாலு சிக்கல்ல இருந்து மீண்டு வந்துருக்காங்க.. இந்த நயன்தாரா ஏம்ம்பா அவங்களை பாடா படுத்துது..” என்றுதானே நினைப்பார்கள்..

ஆனால் உண்மை அதுவல்ல என்று படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இவர்கள் இருவரின் வண்டவாளத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.. மொத்தப்படமும் ஏற்கனவே முடிந்து நாளை ரிலீஸ் என்றால் கூட தயார்நிலையில் தான் இருக்கிறதாம். ஆனால் அப்பாவும் மகனும் தான் படத்தில் ‘அம்மாடி ஆத்தாடி’ டைப்பில் ஒரு குத்துப்பாடல் வேண்டும் என்றும் அதில் நயன்தாராவுடன் சிம்புவின் தம்பி குறளரசனும் சேர்ந்து ஆடவேண்டும் என்றும் கூறி, அந்தப்பாடலை பாடமாக்கியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்களாம்..

சரி அந்தப்பாடலை எடுத்துத்தான் கொடுத்துவிடுவோமே.. ஒருவேளை மார்க்கெட்டிங்குக்கு பயன்பட்டாலும் பயன்படும் என நினைத்த இயக்குனர் பாண்டிராஜ், நயன்தாராவிடம் நயமாக சொல்லி கேட்டுக்கொண்டதால், ஒருமுறை, இருமுறை அல்ல எட்டு தடவை இந்தப்பாடல் காட்சியில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்தாராம் நயன்தாரா..

ஆனால் பாடல் தயாராகவில்லை, சிம்புவுக்கு தலைவலி என எதையாவது சொல்லி எட்டுமுறையும் நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்திருக்கிறார்கள் அப்பாவும் மகனும். இப்போது நயன்தாரா நடந்தது என்ன என்பது குறித்து நடிகர் சங்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டாராம்.. இயக்குனர் பாண்டிராஜின் கருத்தும் நயன்தாராவுக்கு ஆதரவாக இருக்கவே, இப்போது தந்தை மகன் இருவரின் குட்டுப்பட்டு பலரும் காரி உமிழாத குறையாக அப்பாவையும் மகனையும் வசைபாடி தீர்க்கிறார்களாம்.