‘புலி’ பட ஸ்டில்களை ஷேர் செய்தால் போலீஸை கூப்பிடுவாராம் தயாரிப்பாளர்..!

ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் எடுப்பது எதற்கு..? ஒன்று.., காட்சிகளின் கண்டினிட்டி பார்க்க.. அது டெக்னிக்கல் சைடு. இன்னொன்று ஊடகங்களுக்கு கொடுப்பதற்காக.. அது பப்ளிசிட்டி சைடு.. ஆனால் பெரும்பாலான படங்களின் இயக்குனரும், தயாரிப்பாளரும் படத்தின் ஸ்டில்களை பொக்கிஷம் போலத்தான் பாதுகாப்பார்கள்.

ஒரு படத்திற்கு ஐயாயிரம் ஸ்டில் எடுத்தால் போனால் போகிறதென்று பத்திரிகைகளுக்கு ஐம்பது ஸ்டில்கள் மட்டும் தருவார்கள்.. அதுவும் தவணை முறையில்.. மீதி எல்லா படங்களையும் பூஜை அறையில் வைத்து பூட்டி வைத்து விடுவார்கள்.. அந்த புகைப்படங்கள் வெளியுலகுக்கு தெரியாமலேயே அமுங்கிப்போய்விடும். இதனால் யாருக்கு என்ன லாபம்.?.

இது ஒருபக்கம் இருக்க, இந்த புகைப்படங்களை யாராவது தங்களை மீறி திருட்டுத்தனமாக வெளியிட்டால் முழுப்படமே வெளியானது போல பொங்கி விடுவார்கள். அப்படித்தான் புலி பட டீசர் திருட்டுத்தனமாக ரிலீஸானபோது, கொந்தளித்த தயாரிப்பாளர், சீரியசான நடவடிக்கையில் இறங்க, ஒரு வழியாக குற்றவாளி பிடிபட்டான்.

அதுகூட டீசர். அதற்கு அந்த சீரியஸ் ஒகே தான். இப்போது புலி படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனாமாக வெளியாகியுள்ளதால் மீண்டும் கொந்தளிக்கிறது புலி டீம். இதை வெளியிட்டது ஏற்கனவே புலி படத்தின் டிசைனராக பணிபுரிந்து பின்னர் நீக்கப்பட்டவராம்.

அவர்தான் இந்த காரியத்தை பண்ணுகிறார் என்றால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே.. ஆனால் இந்த பட தயாரிப்ப்பாளர்களோ, யார் யார் அந்தப்படத்தின் புகைப்படங்களை ஷேர் செய்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்கள்.