சன் பிக்சர்ஸிடம் இருந்த தப்பிக்க ஷங்கர் பலே ஐடியா…!


பொதுவாக ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும்போது அதை பகிரங்கமாக, கர்வமாக வெளியே கூறுவதுதான் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் பழக்கம். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஷங்கர் தான் இயக்கிவரும் ‘2.O’ படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

இதை இந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவையொட்டி துபாயில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஷங்கர் சொல்லியிருப்பதுதான் ஹைலைட்.. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப்படம் என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க ஷங்கர் இப்போது இப்படி திடீரென மாற்றிச்சொல்வதற்கு என்ன காரணம்..?

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ‘எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. அதன் இரண்டாம் பாகமாக ‘எந்திரன்-2’ படம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதும், எங்கள் அனுமதியில்லாமல் எந்திரன்-2 என்று பெயர் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் எங்களுக்கு ராயல்டியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகையைக் கேட்டதாக சொல்லப்பட்டது.

அதன்பிறகே முதல் பாகத்திற்கு சற்று சம்பந்தமில்லாதவாறு ‘2.O’ என பெயர் வைத்தார் ஷங்கர். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட பட நிறுவனம் கோர்ட்டுக்குப் போக வாய்ப்பிருப்பதால் தான் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் ஷங்கர் என்று சொல்லப்படுகிறது.. படத்தை உருவாக்க பலே பலே ஐடியாக்கள் போடும் ஷங்கர், இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்க மாட்டாரா என்ன..?