ஆடு பகை குட்டி உறவு – ஜெயம் ரவிக்காக பாடும் சிம்பு..!

ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்க லஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ‘டண்டணக்கா’ என்ற பாடலை இமான் இசையில் அனிருத் பாடியிருக்கிறார்.

‘டங்காமாரி’ மூலம் ஒரே நாளில் லைம்லைட்டிற்கு வந்த ரோகேஷ் தான் இந்தப்பாடலை எழுதியிருக்கிறார். இந்தப்பாடல் டி.ஆரை கிண்டல் செய்துவது போல இருக்கிறதே.. இதற்கு டி.ஆர் என்ன சொல்லப்போகிறாரோ என முன்கூட்டியே ஜெயம் ரவிக்கு டி.ஆரை பற்றி தெரிந்த சிலர் எடுத்துச்சொல்ல, உஷார ஜெயம் ரவி, டி.ஆரை சாந்தப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“’ரோமியோ ஜூலியட்’ படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னம்பிக்கை தான் என் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேசன். அதனால் தான் அவரது எவர்கிரீன் பாடலின் “டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரைப் பற்றியும் இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமைபடுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது” என அதில் அவசரமாக முன்னெச்சரிக்கை தந்தி வாசித்திருந்தார்.

பொதுவாக எந்த மேடையாக இருந்தாலும் நாற்பது நிமிடத்துக்கு குறையாமல் பேசும் டி.ஆர், அந்த மேடைகளில் தவறாமல் குறிப்பிடும் வார்த்தை டண்டணக்கா தான்.. அதேபோல எவர் ஒருவர் டி..ஆரைப்பற்றி மிமிக்ரி செய்தாலும் இறுதியில் இந்த டண்டனக்காவை சொல்லித்தான் பினிஷிங் டச் கொடுப்பார்கள்.. அதனால் டி.ஆர் சும்மா இருக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இமான், அனிருத் ஆகிய நான்குபேர் மீதும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

ஆனால் ஜெயம்ரவி தரப்புக்கு எதிராகவோ, அல்லது தந்தைக்கு ஆதரவாகவோ இதுபற்றி சிம்பு இன்னும் வாய்திறக்கவில்லை. இது ஒரு பக்கம் அதே ஜெயம் ரவியின் இன்னொரு படத்துக்கு குத்துப்பாடல் ஒன்றை பாட இருக்கிறார். சுராஜ் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘அப்பாடக்கரு’ படத்துக்காகத்தான் இந்த உதவியை செய்ய இருக்கிறார் சிம்பு. கூடவே, இன்னொரு சர்ப்ரைஸாக சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஸ்வாதியும் இணைந்து பாடுகிறார். அப்பா தண்ணி குடிக்க வேணாம்னு நெனச்ச வீட்டுல.. மகன் டிபன் சாப்பிட போய் உட்காரப்போறார்.. எப்படியோ விஷயம் சுமூகமாக முடிஞ்சா சரி.