எஸ்.எஸ்.குமரனுக்கு இப்படி ஒரு சோகமா..?


‘பொய் படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் எஸ்.எஸ்.குமரன்.. அதை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர், தேநீர் விடுதி, கேரளா நாட்டிளம் பெண்களுடன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவர் விடுதலை ஆனார் அல்லவா..? எஸ்.எஸ்.குமரனின் தாய்மாமன் தான் அவர்.

20 வருடங்களுக்கு முன் நம்பி நாராயணன் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கூறி கைதானார். வழக்கை எதிர்கொண்டு தற்போது தான் நிரபராதி என்பதை நிரூபித்துள்ளார். இவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அந்த காலத்திலேயே இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எஸ்.எஸ்.குமரனை டிவி தொடராக தயாரிக்க சொன்னாராம் நம்பி நாராயணன்.

அப்போது சில எபிசோடுகளை தயாரித்தாலும் சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றை எந்த சேனலிலும் ஒளிபரப்ப இயலவில்லை. இதற்கே தொண்ணூறுகளின் மதிப்பில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவழித்து நட்டமடைந்தார் எஸ்.எஸ்.குமரன்.

அதனால் பிற்காலத்தில் என்னுடைய கதையை படமாக எடுக்கும் உரிமையை உனக்கு தருகிறேன் என நம்பி நாராயணன் வாக்குறுதி அளித்தாராம். ஆனால் தற்போது மாதவன் நடிக்க, வேறு ஒரு நிறுவனம் இந்தப்படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.எஸ்.எஸ்.குமரனுக்கு நம்பி நாராயணனுக்கு கடந்த பல வருட காலமாகவே பேச்சுவார்த்தை இல்லை. அதனால் இப்போது வரும் செய்தியால் அதிர்ச்சியான எஸ்.எஸ்.குமரன் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறாராம்.