“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..!


ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார், நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி..டி.செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் படக்குழுவை வாழ்த்திப் பேசும்போது, தமிழ் சினிமாவில் அவ்வப்போது எழும் பிரச்சனையான டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேசினார்.. “சமீபத்தில் வெளியான கரு படம் கூட, கடைசி நேரத்தில் தியா என பெயர் மாற்றப்பட்டு வெளியானது. மூன்று இடங்களில் டைட்டில் பதிவதால் ஏற்படும் குழப்பம் தான் இது.. ஒரே இடத்தில் அதுவும் இயக்குநர்கள் சங்கத்திலோ அல்லது எழுத்தாளர்கள் சங்கத்திலோ டைட்டிலை பதிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மேடையில் இருந்த ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்தார்.

அடுத்தாக பேசியவர்களில் இயக்குநரும் பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஆர்கே.செல்வமணி திரையுலகம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் சற்று சீரியஸாகவே பேசினார்.. “கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.. பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள். ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம். தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள்.

ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.. இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை. சினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்..? பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை..

எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான். இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.. தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார் மிக நீண்ட சொற்பொழிவாக.