சிவகார்த்திகேயன் ஏன் இப்படி மாறிவிட்டார்..?


சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.டி.ராஜா. இவர்கள் இருவருமே நகமும் சதையும் போல நட்பாக இருந்தவர்கள்தான். ஆனால் சமீபகாலமாக இருவரது நட்பிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியமான உதாரணமாக ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார் ஆர்.டி.ராஜா இந்த படத்தின் படப்பிடிப்பு 70% நிறைவடைந்த நிலையில் இதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு மற்ற படங்களை மளமளவென ஒப்புக்கொண்டு நடித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். இதனால் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ஒருபக்கம் டென்சனாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் படத்தை முன்னோக்கி நகர்த்த முடியாமல் தவிக்கிறார்.

ஏற்கனவே வேலைக்காரன் தற்போது சீமராஜா இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டுக்கும் மீறிய பட்ஜெட்டில் தேவையில்லாத பிரம்மாண்டத்துடன் தயாரித்து பல கோடிகளை நஷ்டப்பட்டு கொண்டார் ஆர்.டி.ராஜா. தற்போது அவர் தயாரித்து வரும் படமும் பைனான்ஸ் சிக்கலால் மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கிறது ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு கைகொடுத்து உதவுவதற்குப் பதிலாக சொந்தமாக படம் தயாரிக்க ஆரம்பித்து விட்ட சிவகார்த்திகேயன் மற்ற படங்களை அதிக அளவில் ஒப்புக்கொண்டு அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.

ஆர்.டி.ராஜாவை முந்தைய படங்களை பிரமாண்டமாக தயாரிக்க சொன்னதே சிவகார்த்திகேயன் தான்.. அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய படங்களில் அதிக அளவு பப்ளிசிட்டி கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது ஆர்.டி.ராஜா தான்.

ரெமோ வெற்றி மேடையில் பேசும்போது ராஜாவை பார்த்து, அவருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லைங்க என கண்கலங்கிய சிவகார்த்திகேயன் தானா இப்போது இப்படி செய்வது என கோடம்பாக்கம் வட்டாரம் அதிர்ச்சியில் இருக்கிறது