சீசனுக்கு மட்டும் வாய்ஸ் கொடுக்கும் வேடந்தாங்கல் பறவையா(ன) விஜய்..?


தலைவா படத்தில் இருந்து விஜய் படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. டைம் டூ லீட் என்ற ஒரு வரிக்காக தலைவா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது. சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடப்பது போன்று போஸ் கொடுத்ததால் ஆளாளுக்கு விமர்சனம் செய்தார்கள்

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்யின் நடை, பாவனையில் மாற்றம் தெரிந்தது. அவர் கெத்தாக நின்றதோடு மட்டும் அல்லாமல் பேச்சிலும் கெத்து இருந்தது. நான் முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன் என்றும் நிஜத்தில் முதல்வரானால் முதல்வர் போன்று நடிக்க மாட்டேன் என்று விஜய் பேசினார். அதுமட்டுமல்ல, ஓவராக நெருக்கடி ஏற்பட்டு தகுதியான மனிதர்களை தானாக உள்ளே வந்து சேர்த்துவிடும். ஒருத்தன் அடிபட்டு நொந்து நூலாகி கிளம்பி வருவான். அவன் தலைவனாக மாறுவான் என்றார் விஜய்.

கடந்த சில வருடங்களாக விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீசின்போது அவர் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பதால் தன்னைத்தான் அடிபட்டு நொந்து நூலாகி கிளம்பி வருபவன் என கூறிக்கொண்டாரோ..?

விஜய் ரசிகர்களை தவிர்த்து பலருக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அது என்ன அவரது பட ஆடியோ ரிலீஸ் மேடைகளில் மட்டும் அவருக்கு திடீரென வீரமும் முதல்வர் கனவும் வந்துவிடுகிறது என்பதுதான்.