புரூஸ் லீ வாலிபர்களுக்கானது – ஜி.வி.பிரகாஷ்!

டார்லிங் பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல் லாபகரமான வசூல் ஆனதால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் – நடிகர் என்று இரட்டை வேடங்களில் பயணிக்க தொடங்கினார்.

புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குனர்களுக்கு எளிதில் கிடைக்கும் கால்சீட் கதாநாயகன் ஆனார் பிரகாஷ். குறைந்த பட்ஜெட் நஷ்டம் என்றால் தப்பித்து விடும் வகையில் இருப்பதால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் விரும்பும் கதாநாயகனாக இன்றைக்கு ஜி.வி.பிரகாஷ் 10 படங்கள் வரை ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குைனர்கள் பாலா, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் ஆகியோர் இயக்கும் படங்களில் பிரகாஷ் நடிக்கவிருப்பதால் நாளை வெளிவர உள்ள புரூஸ் லீ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிகட்டு, மீத்தேன் போராட்டங்களில் பிரகாஷ் குமார் பங்கெடுத்ததால் தமிழக மக்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு விரிவடைந்துள்ளது. இதனால் இவர் நாயகனாக நடித்து வெளியாகும் படங்களை மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ரீலீஸ் தேதியில் குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வந்ததால் புரூஸ் லீ படம் மூன்று முறை தேதி மாற்றம் செய்யப்பட்டு நாளை மார்ச் 17 அன்று தமிழகத்தில் 180 தியேட்டர்களில் வெளியாகிறது.

இளைஞர்களுக்கான படமாக புரூஸ் லீ இருக்கும் என்கிறார் நாயகன் பிரகாஷ் குமார். நடிகனுக்கு முதல் மூன்று நாட்கள் வசூல் தற்போது முக்கியமாக உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே படத்தின் பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார் பிரகாஷ்.

காமெடி படங்கள் விரும்பி பார்க்கப்பட்டு வருவதால் அது போன்ற கதைகளில் நடித்து வருகிறேன். என் தோற்றத்துக்கு பொருத்தமாகவும் இருக்கிறது என்பதால் தொடர்ச்சியாக காமெடி படங்கள் செய்தேன். நான் இதுவரை நடித்து வெளியான படங்களில் புரூஸ் லீ முழு காமெடி படமாக இருக்கும் என்கிறார் நாயகன் பிரகாஷ் குமார்.

இவர் நடித்த படங்களில் “திரிஷா இல்ல நயன்தாரா “தமிழ் நாட்டில சுமார் 10 கோடி வரை் வசூல் செய்த படம். இதுவே பிரகாஷ் நடித்த படங்களில் அதிக வசூல் படம். அதன் பின் வந்த எந்த படமும் லாபகரமான படங்களாக ஓடவில்லை. புரூஸ் லீ படத்தின் வெற்றி பிரகாஷ்க்கு முக்கியமான படமாகிறது.