மலேஷியாவில் படமான ‘கில்லி பம்பரம் கோலி’!

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’.

நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த விளையாட்டுகள் எல்லாம் நம்மூர் கிராமங்களுக்கு உரியதாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்டிருப்பது என்னவோ முற்றிலும் மலேஷியாவில். அது தான் இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வாழ்க்கைக்கு உதவாது என்று பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நல்ல விஷயங்கள் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.

புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என்று ஒன்றுக்கு மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும் ‘தீப்தி ஷெட்டி’ என்ற புதுமுகம் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பெயருக்குக் கூட காதல் என்பது கிடையாது.

அந்த அளவுக்கு நட்பையும் வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டத்தையும் மட்டுமே மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகும் சந்தோஷ்குமாரின் கவர்ச்சியான தோற்றம் இப்போதே ஏகப்பட்ட ரசிகைகளை அவருக்கு உருவாக்கிவிட்டது.

அதேபோன்று இப்படத்தில் நாயகியான தீப்தி ஷெட்டியும் இப்படத்தில் ஒப்பந்தம் ஆன கையுடன் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழி படங்களிலும் நடித்து முடித்து இப்போது மூன்று படங்களுமே ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது. படம் முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருந்தாலும் இதுவரையில் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் கஞ்சாகருப்பும், தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சம்.

அத்துடன் படம் பார்க்க வருபவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே புதுமுகங்களின் படம் என்பதை மறந்து படத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்றும் அந்த அளவுக்கு தமிழ், பிரசாத், நரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் சந்தோஷப்படும் இயக்குனர் இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் என்று இப்போதே பெருமைபடுகிறார். அதேபோல பிரசாத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் விருதுக்கான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏதோ ஒரு வகையில் தன் படத்துக்கு விருது நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறார்.

மேலும் நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் P.சாய்சுரேஷின் படத்தொகுப்பும் தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்த்துள்ளதாக கூறும் இயக்குனர் பணம் கொடுத்து தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் அதை உறுதி செய்வார்கள் என்றும் போஸ்ட் புரொடக்‌ஷனின் போதே அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சந்தோஷப்படுகிறார்.