இயக்குநர் சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’!

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் ” நெஞ்சில் துணிவிருந்தால் ” திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , நடிகர்கள் சந்தீப் கிஷன் , விக்ராந்த் ,லட்சுமி, இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண் , தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. ‘மருத்துவர்களை கடவுளுக்கு நிகர்’ என்போம் அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் ’20 ருபாய் டாக்டர்’ என்று அழைக்கப்படும் பால சுப்பிரமணியம். கோவை ராஜ கணபதி நகரை சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய் தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய குறைய தனது பீஸை உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டுவந்தார். கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய தொகை 20 ரூபாய் தான்.நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்று பெயர் வந்துவிட்டது.கடந்த வருடம் இவர் இறந்து போன விஷயம் அறிந்த கோவை மக்கள் ‘ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி’ என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதரான அவரின் மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோர் இன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் கதைக்கும் மருத்துவ துறைக்கும் சம்பந்தம் உள்ளது அதனால் இயக்குநர் சுசீந்திரன் இவர்களை அழைத்து கௌரவித்தார்.

திரைப்படத்தின் டைட்டிலை (” நெஞ்சில் துணிவிருந்தால் “) இயக்குநர் சுசீந்திரனினுடைய தந்தை நல்லுசாமி அவர்கள் வெளியிட்டார்.