‘சைரா நரசிம்மா ரெட்டி’ எனது நெடு நாள் கனவு : சிரஞ்சீவி


இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது.

பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது.

இவ்விழாவில் R B சௌத்திரி பேசியது….
மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட ராணா தமிழக முன்னணி நாயகன் விஜய்சேதுபதி, நயன்தாரா எனப்பலர் நடித்த இந்தப் படத்தை கடந்த வாரம் பார்த்தேன். தமிழில் நான் தான் ரிலீஸ் செய்வேன் என அடம்பிடித்து வாங்கியுள்ளேன். தெலுங்கில் போல தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் விக்கிரமன் பேசியது…

நான் பல காலமாக சிரஞ்சீவியின் ரசிகன். இப்படி ஒரு பிரமாண்ட படத்தில் அவரைப்பார்க்க ஆவலாக உள்ளேன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்றாலே வெற்றி தான் தமிழில் அவர்கள் வெளியிடுவது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பலம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசியது

இதில் பிரமாண்ட நட்சர்திரங்கள் நடித்திருப்பதால் சௌத்திரி சார் இந்தப்படத்தை வாங்கியிருப்பார் என்றால் கிடையாது இதில் அதைத் தாண்டிய கதை இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார். தமிழில் 40 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். அவர் கை வைத்தால் அது வெற்றி தான். நான் இணையத்தில் ராம்சரண் பாடல்களை பார்ப்பேன் ஹீரோயினாக யார் இருந்தாலும் இவர் மீது தான் கண் போகும். அவர் தமிழுக்கு வந்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியது…

தமிழர்களுக்கு தெலுங்குப்படம் என்றாலே சிரஞ்சீவி படம் தான். 20 வருடங்களுக்கு முன்பே அவரது படம் எனக்கு தமிழில் 25 லட்சத்தை சம்பாதித்து தந்தது. அவருடைய மார்க்கெட் அந்த அளவு பெரியது. சூப்பர் குட் இந்தப்படத்தை வாங்கியிருக்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

இயக்குநர் சசி பேசியது…

“மகதீரா” படம் சாதாரண படம் என்று நினைத்து பார்த்தேன் படம் மிரட்டலாக இருந்தது. அந்தப்படத்தின் ஹிஸ்டாரிகல் பகுதிகள் தனியே எடுக்கப்பட்டது போல் இந்தப்படம் இருக்கிறது. பல நட்சத்திரங்கள் நடித்தாலும் சிரஞ்சீவிக்காகவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை இப்படம் பெறும் என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா பேசியது …

நான் சிரஞ்சீவின் மிகப்பெரிய ரசிகன். என் தந்தை ஹிட்லர் எடுத்த போது அவர் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கமல் சார் ரஜினி சார் போல் தெலுங்கில் அவர்கள் இரண்டும் கலந்த ஒரே ஸ்டார் சிரஞ்சீவி சார் தான். இந்த வயதில் அவர் இப்படியான படைப்போடு வந்திருக்கிறார். உலகில் குழந்தையை கொஞ்சும் வளர்க்கும் அப்பாவை பார்த்திருக்கிறேன் முதல்முறையாக மகன் தந்தையை கொண்டாடும் படமாக இந்தப்படத்தைப் பார்க்கிறேன். இந்தப்படத்தில் மிகப்பெரிய ஆளுமைகள் மதித்து தங்கள் பங்களிப்பை தந்துள்ளார்கள் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற என் வாழ்த்துக்கள் என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி

மிக அழகான காலகட்டத்தில் நான் இருக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் ஒரே மாதிரியான இரு வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு பலரது ரத்தம்மும் தியாகமும் இருக்கிறது அவற்றை ஞாபகப்படுத்தும் இரண்டு படங்களில் பணிபுரிவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அமித் திரிவேதி வட இந்திய சாயலே இல்லாத தென்னிந்திய இசையை இந்தப்படத்தில் கொடுத்திருக்கிறார். நான் என்னால் முடிந்தளவு சிறப்பான பணியை தந்துள்ளேன். இந்தப்படத்தில் வேலை பார்த்தது நல்லதொரு அனுபவமாக இருந்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

நடிகை நாயகி தமன்னா பேசியது ….

வீட்ல என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தாலும் குடும்பம் முழுதும் அங்கு இருக்க வேண்டும் இன்று நான் சினிமா கற்றுக்கொண்ட நிறைய ஆளுமைகள் இங்கு இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய படத்தில் நான் இருப்பதே பெருமைதான். நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே இருந்தது. சுரேந்தர் ரெட்டி சார் படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். இது இந்தியா முழுமைக்கும் உள்ள ரசிகர்களுக்கான படம். பாகுபலிக்கு பிறகு மிகப்பெரிய படமாக இந்தப்படம் கிடைத்திருக்கிறது. சிரஞ்சீவி சாருடன் முதல்முறை நடித்தபோது டயலாக்கை மறந்தவிடக்கூடாது என பெரும் பதற்றம் இருந்தது. அவருடன் நடித்தது நம்பமுடியாத அதிர்ஷ்டம். நயன்தாராவுடன் நடித்ததும் மிகப்பிடித்த, மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் பங்குபெறும் வாய்ப்பு தந்ததற்கு ராம்சரணுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியது….

எல்லாருடைய அன்புக்கும் நன்றி.
இந்தப்படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். 96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம். நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம். தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். சினிமாவின் மேஜிக் அதுதான் இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள் ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார் அப்போதிலிருந்து உருவான படம் இது. கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி. 10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார். கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி இந்த வாரம் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள், கொண்டாடுங்கள் என்றார்.

சிரஞ்சீவி பேசியது…

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு. பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின் சினிமா வந்த பிறகு தமிழில் வந்த “கத்தி” படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார். நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி. இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.