சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் – இயக்குனர் பொன்ராம்!

ஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றி விடும். அப்படி இருக்கையில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தோள்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன. சீமராஜாவும் வெற்றி தான் என்ற உறுதியில் இருக்கும் பொன்ராம், அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது என்கிறார்.

சீமராஜா பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக மேம்பட்டிருக்கிறோம். அதற்காக எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுதுபோக்கு தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.

“அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள் தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. சீமராஜா திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று அதிக திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.