புலி முருகன் – விமர்சனம்


காட்டின் அருகே உள்ள கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த மோகன்லால். சிறுவயதில் தன் தந்தையை கண்முண்ணே புலியிடம் பறிகொடுத்தவர்.. அதற்கு காரணமானவர்கள் பாரஸ்ட் அதிகாரிகள்.. அதனால் அவரது சிறுவயதிலேயே இரைதேடி ஊருக்குள் வந்து உயிர்களை கொல்லும் புலியும் மோசமான பாரஸ்ட் அதிகாரிகளும் அவரது எதிரிகளாகின்றனர்.

மனைவி,, மகளுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தும் மோகன்லால் அவரது ஒரே தம்பியை நகரத்தில் படிக்கவைக்கிறார். கேன்சர் சிகிசைக்கான மருந்து கண்டுபிடிக்க கஞ்சா தேவையென்று சொன்னதை நம்பி, தம்பியின் நண்பன் பாலாவின் நிறுவனத்துக்கு, மலையில் இருந்து நகரத்துக்கு அதை தனது லாரியில் கடத்தி வந்து கொடுக்கிறார்.

அதேசமயம் பாரஸ்ட் ரேஞ்சர் கிஷோர் தன்னை தாக்கிய மோகன்லாலை கைது செய்ய துடிக்கிறார். வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, பாலாவின் தந்தை ஜெகபதிபாபு சொன்னதன் பேரில் நகரத்தில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுசிலேயே தனது மனைவி, மகள், தம்பியுடன் தங்குகிறார் மோகன்லால். அவரது தம்பிக்கு தனது கம்பெனியிலேயே வேலைபோட்டு கொடுக்கிறார் ஜெகபதிபாபு..

ஆனால் கொஞ்சநாளிலேயே ஜெகபதிபாபு போதை மருந்து தயாரிக்கும் உண்மை மோகன்லாலுக்கு போலீஸார் மூலமாக தெரியவருகிறது. இந்த விஷயத்தில் மோகன்லால் போலீஸுக்கு உதவி செய்யபோக, இந்த களேபரத்தில் நடக்கும் சண்டையில் பாலா உயிரிழக்கிறார். ஜெகபதிபாபு போலீஸில் இருந்து தப்புகிறார்.

ஊர் திரும்பும் மோகன்லாலுக்கு மீண்டும் புலி ஒன்று கிராமத்திற்குள் வந்து சில ஆட்களை கொன்ற தகவல் கிடைக்கிறது. கூடவே தன்னை கொல்வதற்காக ஜெகபதிபாபுவும் காட்டில் உள்ள அவரது கூட்டாளியுடன் காத்திருப்பது தெரிய வருகிறது.. இந்த இரண்டு மிருகங்களையும் மோகன்லாலால் ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

56 வயதில் இப்படி ஒரு சாகசமா..? இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு சவால்விட்டு வாய் பிளக்க வைக்கிறார் மோகன்லால். குறிப்பாக மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.. காதர் பாயிடம் இருந்து லாரியை மீட்க நடத்தும் சண்டைக்காட்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் மோகன்லால். அதிலும் அந்த 20 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி உங்களை இரண்டாவது முறையும் படத்துக்கு டிக்கெட் போட தூண்டும்.

ஆதிவாசி கிராமத்து பெண்ணாக, மோகன்லாலின் மனைவியாக யதாரத்தமான நடிப்பு கமாலினி முகர்ஜியுடையது. மோகன்லாலை பார்து ஒன்சைடாக பார்த்து ரொமாண்டிக் லுக் விட்டு கமாளினையை எரிச்சலூட்டும் வேலையுடன் தனது வேலையை முடித்துக்கொள்கிறார் நமீதா.

வில்லனாக ஜெகபதிபாபு, துணை வில்லனாக அவரது மகன் பாலா, இடையில் வரும் வில்லனாக ரேஞ்சராக வரும் கிஷோர், மோகன்லாலின் மாமனாக வரும் லால், அவ்வப்போது காமெடி கலாட்டா பண்ணும் சுராஜ் வெஞ்சாரமூடு, நாய்களை வைத்துகொண்டு மோகன்லாலிடம் உதார் காட்டி பல்பு வாங்கும் சுதீர் காரமணா, ஜெகபதிபாபுவின் வலதுகையாக வரும் ஹரீஷ் பெராடி, மோகன்லாலின் தம்பி என பலரும் கதைக்கு பொருத்தமான தேர்வு என சொல்லவைக்கின்றனர்.

சண்டைக்காட்சிகளை அதி அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன்.. புலியுடன் மோதும் காட்சிகளையும், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியையும் ஹாலிவுட்டுக்கு நிகராக வடிவமைத்துள்ளார். காட்டுக்குள் நம்மை சுற்றிவர செய்த உணர்வை தந்துள்ளது ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு.. காட்சிகளை த்ரில்லுடன் நகர்த்தியுள்ளது கோபிசுந்தரின் பின்னணி இசை.. அதிலும் சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம்.

ஒரு மாஸ் ஹீரோவை வைத்து சிம்பிளாக ஒரு படத்தை தந்துவிட்டு போயிருக்கலாம்.. ஆனாலும் காலத்துக்கும் பெயர் சொல்லலும் விதமாக ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்க தகுதியானவர்.

புலி முருகன் – மீண்டும் ஒருமுறை பார்க்க தூண்டும் சாகச வேட்டைக்காரன்