அதே கண்கள் வெற்றியைத் தொடர்ந்து கலையரசனின் ‘எய்தவன்’!

தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து புயல் போல் எல்லோரையும் புரட்டிப் போடும். அப்படி சமீபத்தில் வெளியான ஒரு படம்தான் துருவங்கள் பதினாறு. 21 வயது இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிவகார்த்திகேயன், சிம்பு என பலரது பாராட்டுக்களை பெற்றது.

இந்த படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக அண்மையில் வெளியான கடுகு படமும் இதேபோல் பலரது பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்நிறுவனம் சார்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் 8 தோட்டாக்கள் படமும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக இந்நிறுவனம் Friends Festivel Films நிறுவனம் சார்பாக சுதாகரன் தயாரிப்பில் மெட்ராஸ், கபாலி, அதே கண்கள் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கலையரசன் ஹீரோவாகவும் பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் எய்தவன் படத்தை ரிலீஸ் செய்கிறது.

தொடர்ந்து நல்ல தரமான படங்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், எய்தவன் படத்தை பார்த்த கணமே வெளியிட முடிவு செய்த்ததால் இதுவும் நிச்சயம் ஒரு தரமான படமாக இருக்கும் என இப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதயானைக்கூட்டம் படத்தில் விக்ரம் சுகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படம் வரும் மே 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இத்தகவலை நடிகர் கலையரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.