டைரக்சனில் விசாலம்.. சம்பளம் தருவதில் குறுகிய மனசு ; இது(தான்) ஷங்கர் பாலிஸியா..?


ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருப்பவர் முரளி மனோகர்.. மிகவும் துடிப்பான இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கரின் கட்டளைகளை சிரமேற்று பம்பரமாக சுழலுவார்.. ரஜினி டப்பிங் பேசும்போது அவருக்கு உதவியாக வசனங்களை எடுத்துக்கொடுக்கும் வேலையை செய்து வந்ததும் இவர் தான். ரஜினி கூட “முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க.. ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..? என கேட்கும் அளவுக்கு திறமைசாலி.

ஆனால் இத்தனை பெரிய பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகியுள்ள போதிலும் முரளி மனோகருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக தகவல் கசிந்தது. இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் முன் அவர் பதிவு செய்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘2.O’ படத்துக்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலைசெய்து வருகிறேன்.. “கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி.. என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்” என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை” என விரக்தியுடன் குறிப்பிட்டிருந்தார்.

முரளி மனோகருக்கு ஆதரவாக பல உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும் அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள். இந்த விவகாரம் மீடியாக்களிலும் வெளியானதைத் தொடர்ந்து படத்தயாரிப்பு நிறுவனமான லைகா முரளி மனோகருக்கு உரிய சம்பளத்தை கொடுத்து பிரச்சனிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சினிமாவில் உதவி இயக்குனர்கள் பிழைப்பு எப்போதுமே நாய் பிழைப்பு தான். ஷங்கர் மாதிரி இயக்குனர்கள் தான், நல்ல சம்பளம் கொடுத்து அல்லது வாங்கித்தந்து உதவி இயக்குனர்களை கவுரமாக நடத்துகிறார்கள் என்றால், இப்போது நடந்திருக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது பிரமாண்டம் காட்டும் ஷங்கரின் மனதிலும் இவ்வளவு குறுகிய புத்தியா என உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.